LATEST NEWS
ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட் நியூஸ்.. இந்த முறை புதிய டிசைனில் கிடைக்கப்போகும் பொங்கல் வேட்டி, சேலை..!!!
2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏழை, எளிய மக்களுக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த தமிழ்நாடு அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 2013-14ஆம் ஆண்டிற்குப் பிறகு இவற்றின் தரத்தில் மாற்றங்கள் செய்யப்படாத நிலையில், இந்த முறை புதிய நூல் ரகங்கள், அதிக உறுதித்தன்மை மற்றும் பொதுமக்கள் விரும்பும் வகையிலான புதிய வடிவமைப்புகளுடன் இவை தயாரிக்கப்படவுள்ளன. அதன்படி, சேலைகளில் சில்வர் அல்லது காப்பர் நிற ஜரிகை பார்டரும், வேட்டிகளில் வண்ண பாலியஸ்டர் பார்டரும் இடம்பெறவுள்ளது. இத்திட்டத்திற்காக முதற்கட்டமாக 300 கோடி ரூபாய் முன்பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் சுமார் 177.64 லட்சம் சேலைகளும், 177.22 லட்சம் வேட்டிகளும் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய தர அளவீடுகளின்படி இவற்றை உற்பத்தி செய்ய மொத்தம் 642.88 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த உற்பத்தியை 2027 ஜனவரி முதல் ஜூன் வரை ஆறு மாதங்களுக்கு முன்கூட்டியே செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கைத்தறி, பெடல் தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களைச் சேர்ந்த நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் தொடர்ந்து வேலைவாய்ப்பு கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இலவச வேட்டி, சேலைகள் தகுதியான பயனாளிகளுக்குச் சென்றடைவதை உறுதி செய்ய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, ரேஷன் கடைகளில் உள்ள POS இயந்திரங்கள் மூலம் வேட்டி, சேலைகளைப் பெறும்போது குடும்ப அட்டைதாரர்களின் கைவிரல் ரேகை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டை இல்லாத முதியோர் ஓய்வூதியப் பயனாளிகள் ஆதார் அடிப்படையிலான கைவிரல் ரேகை அல்லது கண் கருவிழி பதிவு மூலம் வேட்டி, சேலைகளைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், முந்தைய 2026 பொங்கல் திட்டத்தில் எஞ்சியுள்ள பழைய ரக ஆடைகளை, நடப்பாண்டு தீபாவளி பண்டிகையின்போது முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு வழங்கவும் அரசு அனுமதி அளித்துள்ளது
