LATEST NEWS
50 ரூபாய் தந்த பேரானந்தம்… நாக்பூர் ஆட்டோ ஓட்டுநரின் ஈகைக்கு குவியும் பாராட்டுகள்!
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜேந்திர தெம்ரே இவரை அனைவரும் அன்போடு ‘ராஜு பாபா’ என்று அழைக்கிறார்கள். ஒருமுறை சவாரி முடிந்து பயணி ஒருவர் இவருக்கு ஆட்டோ வாடகை கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார். பின்னர் பணத்தை எண்ணிப் பார்த்தபோது, அந்த பயணி தவறுதலாக 50 ரூபாய் அதிகமாகக் கொடுத்திருப்பது ராஜு பாபாவிற்குத் தெரியவந்தது. உழைக்காமல் கிடைத்த அந்த கூடுதல் பணத்தை தன் சொந்தத் தேவைக்குப் பயன்படுத்த விரும்பாத அவர், அதை ஏழை மற்றும் தேவையுள்ள எளிய மக்களுக்குக் கொடுத்து உதவ வேண்டும் என்று மனதார முடிவு செய்தார்.
இந்த முடிவிற்குப் பிறகு, ராஜு பாபா சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு முதிய பெண்மணியைப் பார்த்து தனது ஆட்டோவை நிறுத்தினார். தான் செல்லும் வழியில்தான் அவரும் செல்வதாகக் கூறி, அந்தப் பெண்ணை அன்போடு தனது ஆட்டோவில் ஏற்றிச் சென்று அவரது இலக்கில் இலவசமாக இறக்கிவிட்டார். அதோடு நில்லாமல், அந்தப் பெண்ணிடம் 10 ரூபாயையும் கொடுத்துள்ளார். அந்தப் பெண் பணத்தைப் பெற தயங்கியபோது, தனக்குக் கிடைத்த கூடுதல் பணத்தைப் பகிர்ந்து கொள்வதாகக் கூறி நெகிழ வைத்துள்ளார். தொடர்ந்து சிறிது தூரம் சென்றபோது, வெயிலில் நடந்து சென்று கொண்டிருந்த மற்றொரு முதியவரைக் கண்டு, அவருக்குக் குடிக்கத் தண்ணீரும் கொடுத்து, மேலும் 10 ரூபாய் பணத்தையும் கொடுத்து உதவி செய்து அவரது தாகத்தையும், தேவையையும் தணித்துள்ளார்.
https://www.instagram.com/reel/DZz6o27oAlT/?utm_source=ig_web_button_share_sheet
தன்னிடமிருந்த 50 ரூபாயில் 20 ரூபாயை இருவருக்குப் பகிர்ந்து கொடுத்துவிட்டு, மீதமுள்ள 30 ரூபாயையும் மற்றுமொரு தேவையுள்ள நபருக்குக் கொடுப்பேன் என்று ராஜு பாபா புன்னகையோடு பேசும் வீடியோ சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் வைரலானது. இதைப் பார்த்த ஆயிரக்கணக்கான இணையவாசிகள் அவரது பெருந்தன்மையைப் பாராட்டி வருகின்றனர். “உண்மையான பணக்காரத்தனம் என்பது ஒருவரது வங்கிச் சேமிப்பில் இல்லை, அவரது நல்ல உள்ளத்தில்தான் இருக்கிறது” என்றும், பிறருக்கு உதவ கோடிக்கணக்கில் பணம் தேவையில்லை, நல்ல எண்ணம் இருந்தால் போதும் என்றும் நெட்டிசன்கள் கருத்துகளைப் பகிர்ந்து ராஜு பாபாவை வாழ்த்தி வருகின்றனர்.
