LATEST NEWS
கையாலாகாத ஆளுங்கட்சி.. மாநில உரிமைகளைத் தாரை வார்த்த ‘சோபா மாடல்’ அரசு.. உதயநிதி ஸ்டாலின் பகீர் அட்டாக்..!!
மதுரையில் தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் மக்கள் பிரதிநிதி போல நேரில் சென்று ஆய்வுகள் நடத்தியதற்குச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளுநரின் இந்தச் செயலை அனுமதித்ததன் மூலம், தற்போதைய தவெக அரசு மாநில உரிமைகளைத் தாரை வார்த்துச் சமரசம் செய்துள்ளது வெட்டவெளிச்சமாகி இருப்பதாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ளார். வைகை ஆற்றைச் சீரமைக்க அரசு தவறினால் ஆளுநர் மாளிகை களமிறங்கும் என்ற ஆளுநரின் பேச்சு அடாவடியானது என்றும், அதற்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காரணம் என்றும் அவர் சாடியுள்ளார்.
முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இது போன்ற ஆய்வுகளில் ஈடுபட்ட போது, திமுகவினர் கருப்புக் கொடி ஏந்தி மிகக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்ததை உதயநிதி நினைவு கூர்ந்துள்ளார். மேலும், மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருந்த கால கட்டத்தில் ஆளுநரின் வரம்புகளை மீறிய இத்தகைய தலையீடுகளைத் திமுக அரசு ஒருபோதும் அனுமதித்தது இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ‘ஆளுநர் ஆய்வு செய்தார்’ என்ற கூவத்தூர் காலத்து வரலாறு, தற்போதைய குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
சட்டத்திற்குப் புறம்பாக அடுத்தக் கட்சி எம்.எல்.ஏ-க்களைத் தங்களுக்குள் இழுக்கும் வேலையில் ஈடுபட்டு வரும் தவெக அரசு, ஆளுநர் தங்களுக்கு எதிராக ஏதேனும் நடவடிக்கை எடுத்து விடுவாரோ என்ற அச்சத்தில் தான் அவரது இந்த அத்துமீறிய ஆய்வை எதிர்க்காமல் அமைதியாக வேடிக்கை பார்க்கிறதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். எனவே, மாற்றம் என்ற முழக்கத்தோடு ஆட்சிக்கு வந்தவர்கள் மாநில உரிமைகளை அடகு வைக்காமல், ஆளுநரின் ஆய்வு நடைமுறைகளை உடனடியாக நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்
