LATEST NEWS
அடுத்தடுத்த மயக்கம், வாந்தி…மொஹரம் ஊர்வலத்தில் நடந்த பகீர் சம்பவம்.. ஊர்வலத்தில் சிக்கிய கொடூரன்!
தெற்கு மும்பையில் நடைபெற்ற ஷியா இஸ்லாமியர்களின் மொஹரம் ஊர்வலத்தில் மாபெரும் சதித்திட்டம் ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடந்த இந்த ஊர்வலத்தில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்திக் கொண்ட பயாஸ் பிரேம்ஜி என்ற நபர், பொதுமக்களிடம் நோய் எதிர்ப்பு மாத்திரைகள் மற்றும் வலி நிவாரணிகள் எனக் கூறி சில மர்ம மாத்திரைகளை வழங்கியுள்ளார். இதை நம்பி உட்கொண்ட சல்மான் சையத் உள்ளிட்ட சிலருக்குத் தீவிர வயிற்று வலியும் வாந்தியும் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே, சந்தேகத்திற்கு இடமான வகையில் செயல்பட்ட அந்த நபரை அங்கிருந்த மூன்று பெண் தன்னார்வலர்கள் துரிதமாகச் செயல்பட்டுத் தடுத்து நிறுத்தி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பைகுல்லா காவல்துறையினர், பயாஸ் பிரேம்ஜியைக் கைது செய்து அவர் வைத்திருந்த மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. இணையதளம் மூலமாக 30,000 காலி கேப்சூல்களையும், எலி மருந்து தயாரிக்கப் பயன்படும் 50 கிலோ ‘சிங்க் பாஸ்பைடு’ என்ற கொடிய ரசாயனத்தையும் அவர் வாங்கியுள்ளார். தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையிலேயே இந்த அபாயகரமான விஷ மாத்திரைகளைத் தயாரித்ததாகவும், இதன் மூலம் சுமார் 15,000 பேரின் உயிரைப் பறிக்கத் திட்டமிட்டிருந்ததாகவும் அவர் போலீசாரிடம் பகிரங்கமாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள பயாஸ், சமீபத்திய ஆண்டுகளில் ஈரான் மற்றும் ஈராக் போன்ற நாடுகளுக்குப் பலமுறை பயணம் செய்திருப்பதால், இந்தச் சதியின் பின்னணியில் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுக்குத் தொடர்பு உள்ளதா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மறுபுறம், மனைவியைப் பிரிந்த விரக்தியிலும் மனச்சோர்விலும் அவர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. அவர் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவு 123 மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது மும்பை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை இரண்டு நாள் காவலில் எடுத்து அடுத்தகட்ட விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
