LATEST NEWS
பகீர் வீடியோ..! டோல்கேட் ஊழியரை கார் ‘பானட்டில்’ ஏற்றி இழுத்துச் சென்ற டிரைவர்… நடந்தது என்ன..? கேரளாவில் நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்..!!
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள பந்தீராங்காவ் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் தப்பிச்செல்ல முயன்ற கார் ஒன்று, தடுத்த நிறுத்த முயன்ற சுங்கச்சாவடி ஊழியர் மீது மோதி, அவரை காரின் முன்பகுதியில் (பானட்) வைத்து சுமார் 100 மீட்டருக்கும் மேல் இழுத்துச் சென்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சனிக்கிழமை மாலை நிகழ்ந்த இந்த கொடூர சம்பவத்தில், சுங்கச்சாவடியில் பணியில் இருந்த ஜித்தேஷி என்ற ஊழியர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சுங்கச்சாவடி கட்டணத்தைத் தவிர்க்க நினைத்த அந்த கார், தனக்கு முன்னால் சென்ற மற்றொரு காரைப் பின்தொடர்ந்து வேகமாக வெளியேற முயன்றது. அப்போது, அங்கிருந்த ஊழியர் ஜித்தேஷி காரை நிறுத்த முற்பட்டார். ஆனால், ஓட்டுநர் காரை நிறுத்தாமல் அவர் மீது ஏற்றி வேகமாக இயக்கியதால், ஜித்தேஷி காரின் பானட்டில் சிக்கிக்கொண்டார். ஊழியர் பானட்டில் தொங்கிய நிலையிலும் காரை நிறுத்தாமல் ஓட்டுநர் தொடர்ந்து இயக்கிய நிலையில், அங்கிருந்த மற்ற ஊழியர்கள் ஓடிவந்து காரை மடக்கி நிறுத்தினர்.
கார் நிறுத்தப்பட்ட பின்னரும், காரில் இருந்த பயணிகளுக்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும் கைக்கலப்பும் ஏற்பட்டது. கார் ஓட்டுநர், கீழே விழுந்த ஊழியரை மீண்டும் தாக்கியதோடு, வாக்குவாதத்தின் போது காரின் பானட்டை சேதப்படுத்த முயன்றதாக ஊழியர் மீது குற்றம் சாட்டினார். இச்சம்பவம் குறித்து சுங்கச்சாவடி நிர்வாகம் மற்றும் கார் பயணிகள் தரப்பில் பந்தீராங்காவ் காவல் நிலையத்தில் பரஸ்பர புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த பந்தீராங்காவ் சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் தொடர்பாக இதுபோன்ற மோதல்களும், அதன் காரணமாக போக்குவரத்து நெரிசல்களும் அடிக்கடி நடப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
