LATEST NEWS
“மெஸ்ஸியை வைத்து அரங்கேறிய மகா நாடகம்..!”ரூ. 126 கோடி சுருட்டலா?!… கேரளாவை உலுக்கிய அர்ஜென்டினா மேட்ச் சர்ச்சை..!!
கேரளாவில் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்புரீதியான போட்டியை நடத்துவதாகக் கூறி, பல கோடிக்கணக்கில் நிதி முறைகேடு மற்றும் மோசடி நடைபெற்றிருப்பதாகச் சிறப்புச் செயலாளர் என். பிரசாந்த் சமர்ப்பித்துள்ள விசாரணை அறிக்கை அம்மாநில அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ‘கோட் அண்ட் குளோபல்’ மற்றும் ‘ரிப்போர்ட்டர் பிராட்காஸ்டிங்’ ஆகிய தகுதியற்ற நிறுவனங்களை டெண்டர் இன்றி ஸ்பான்சர்களாகத் தேர்ந்தெடுத்தது, அமெரிக்காவில் நிதி குற்றப் பின்னணி கொண்ட முகமைகள் மூலம் அதிகாரப்பூர்வ ஆவணங்களின்றி வெளிநாடுகளுக்குப் பணப் பரிமாற்றம் செய்தது எனப் பல்வேறு சர்வதேசக் குற்றச்சாட்டுகள் இதில் அடுக்கப்பட்டுள்ளன.
அர்ஜென்டினா கால்பந்து சம்மேளனத்துடன் எவ்வித சட்டப்பூர்வ ஒப்பந்தங்களும் இல்லாத சூழலில், வெறும் மின்னஞ்சல் தொடர்புகளை மட்டுமே வைத்துக்கொண்டு விளம்பர நோக்கத்திற்காக இப்போட்டி அறிவிக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. மேலும், அர்ஜென்டினா சம்மேளனத்தின் அதிகாரப்பூர்வ அழைப்பு ஏதுமின்றி அன்றைய விளையாட்டுத் துறை அமைச்சர் அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட அதிகாரிகள் ஸ்பெயின் நாட்டுக்கு மேற்கொண்ட சுற்றுப்பயணம் குறித்தும் எந்தவொரு ஆவணங்களும் இல்லை. இதனிடையே, விதிமுறைகளை மீறி வெளிநாட்டிற்குப் பணம் பரிமாறியதற்காக ரூ.22.68 கோடி சேவை வரி செலுத்தக் கோரி ஜிஎஸ்டி உளவுப் பிரிவு சம்மன் அனுப்பியதும், விசாரணையை தீவிரமாக நடத்திய அதிகாரி திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு, முடக்கப்பட்டிருந்த இந்த வழக்கிற்கு மீண்டும் புத்துயிர் அளித்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. ரூ.126 கோடி நிதிப் பரிமாற்றம் மற்றும் இதில் முந்தைய இடதுசாரி அரசின் உயர்மட்டத் தலைவர்களுக்கு உள்ள தொடர்புகள் குறித்து மத்திய புலனாய்வு அமைப்புகளான சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை மூலம் முழுமையாக விசாரிக்க விளையாட்டுத் துறை அறிக்கை பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பான இறுதி அறிக்கையைச் சிறப்புச் செயலாளர் முதலமைச்சர் வி.டி. சதீசனிடம் ஒப்படைத்துள்ள நிலையில், அவரே அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
