LATEST NEWS
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து ராஜினாமா.. பின்னணியில் என்ன நடக்கிறது..? சந்தேகம் கிளப்பிய திருமாவளவன்…!!
“அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து ராஜினாமா செய்வது தமிழ்நாடு அரசியலுக்கு ஆரோக்கியமானது அல்ல” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கவலை தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் இன்று (ஜூன் 29) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தின் தற்போதைய அரசியல் நகர்வுகள் மற்றும் திடீர் பதவி விலகல்கள் குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய திருமாவளவன், “எந்தவொரு பின்னணியில் அல்லது அழுத்தத்தின் காரணமாக இந்த ராஜினாமாக்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், மக்கள் பிரதிநிதிகள் தங்களது பதவிக்காலம் முடிவதற்குள் இப்படி திடீரென விலகுவதை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது” என்று குறிப்பிட்டார்.
மேலும், இந்த தொடர் ராஜினாமாக்களை வெறும் அதிமுகவின் உட்கட்சி விவகாரமாக மட்டுமே பார்த்து நாம் கடந்து சென்றுவிட முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதுபோன்ற திடீர் பதவி விலகல்களும், அதன் விளைவாக ஏற்படும் அரசியல் மாற்றங்களும் ஒட்டுமொத்த ஜனநாயக முறைக்கே உகந்ததல்ல என்றும் அவர் தனது பேட்டியில் வலியுறுத்தியுள்ளார்.
