LATEST NEWS
“வயிற்றுக்குள் வளர்ந்த தலைமுடி, விரல்கள்… 3 மாத ஆண் குழந்தைக்கு.. மருத்துவர்கள் செய்த மிரளவைக்கும் ஆபரேஷன்..!!”
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், 3 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் இருந்து 8 வாரமே ஆன, 60 கிராம் எடையுள்ள வளராத கருவை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். மருத்துவ அறிவியலில் இந்த அரிய வகை பிறவிக் குறைபாடு ‘ஃபீட்டஸ் இன் ஃபீட்டு’ என்று அழைக்கப்படுகிறது. ஷாஜஹான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு விவசாயத் தம்பதியின் குழந்தைக்குச் செய்யப்பட்ட இந்த அறுவை சிகிச்சை, உலகிலேயே மிகவும் அரிதான வழக்குகளில் ஒன்று என்றும், பரேலி நகரில் பதிவாகும் இரண்டாவது வழக்கு என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தை பிறந்த சில நாட்களிலிருந்தே பால் செரிப்பதில் சிரமம், தொடர் வாந்தி மற்றும் வயிறு அசாதாரணமாக வீங்குதல் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டது. இதனால் குழந்தையின் பெற்றோர் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, குழந்தையின் கல்லீரலுக்குக் கீழே ஒரு மனித உடலமைப்பு வளர்ந்து வருவதும், அதில் தலைமுடி, எலும்புகள் மற்றும் விரல்கள் போன்ற பாகங்கள் இருப்பதும் அல்ட்ராசவுண்ட் பரிசோதனையில் தெரியவந்தது. இந்த வளராத கருவானது குழந்தையின் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்துடன் மிக நெருக்கமாக ஒட்டிக்கொண்டு, குழந்தையின் கல்லீரலில் இருந்தே இரத்தத்தைப் பெற்று வளர்ந்து வந்ததால், குழந்தை நல அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜீவ் அகர்வால் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சுமார் 2 மணி நேரம் மிகவும் சவாலான மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொண்டு அதைப்பாதுகாப்பாக பிரித்தெடுத்தனர்.
மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, ‘ஃபீட்டஸ் இன் ஃபீட்டு’ என்பது தாயின் வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் உருவாகும்போது, ஆரம்பக் கட்டத்திலேயே ஏதோ ஒரு காரணத்தால் ஒரு கரு மற்றொரு கருவின் உடலுக்குள் சென்று மறைந்துவிடும் ஒரு விசித்திரமான நிலையாகும். பொதுவாக 5 லட்சம் குழந்தைகளில் ஒருவருக்கு மட்டுமே ஏற்படும் இந்த அரிய நிகழ்வு, இந்த ஆண் குழந்தைக்கு கல்லீரலுக்குக் கீழ் வலது புறத்தில் அமைந்திருந்தது இதை மேலும் அரிதான ஒன்றாக மாற்றியுள்ளது. சுமார் 200 மில்லி திரவம் கொண்ட ஒரு பைக்குள் அடைபட்டிருந்த இந்த கருவை வெற்றிகரமாக அகற்றிய பின், தற்போது குழந்தை முற்றிலும் ஆபத்துக் கட்டத்தைத் தாண்டி நலம் பெற்று வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
