LATEST NEWS
அப்பாடா..! இனி ‘கட்டிங்’கிற்கு எக்ஸ்ட்ரா காசு இல்லை… டாஸ்மாக் ஊழியர்களின் திடீர் முடிவால் நிம்மதி பெருமூச்சு விடும் மதுப்பிரியர்கள்..!!
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையைவிட கூடுதல் தொகை வசூலிக்கக் கூடாது என்ற அரசின் உத்தரவை முழுமையாக ஏற்பதாக டாஸ்மாக் பணியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து சங்க நிர்வாகிகளும் ஒன்றிணைந்து, இனி MRP விலைக்கு மட்டுமே மது விற்பனை செய்ய ஒருமனதாக முடிவு செய்துள்ளதாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பழனி பாரதி செய்தியாளர்கள் சந்திப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அரசின் இந்த கண்டிப்பான அறிவுறுத்தலைத் தொடர்ந்து ஊழியர்கள் எடுத்துள்ள இந்த அதிரடி முடிவு, மதுப்பிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த அறிவிப்பு ஒருபுறமிருக்க, கடைகளில் குளிர்சாதனப் பெட்டி பராமரிப்புச் செலவு, வாடகை மற்றும் இதர உள்கட்டமைப்பு செலவுகளுக்காகவே ஊழியர்கள் கூடுதல் தொகை வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுவதாக சங்க நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது. எனவே, அரசு இந்த நடைமுறைச் சிக்கல்களைக் களைந்து தங்களுக்கு உரிய தீர்வை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இனிவரும் நாட்களில் இந்த முடிவின் மூலம் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டணப் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
