LATEST NEWS
“இங்க நடந்ததை வெளிய சொன்னா அவ்ளோதான்… மாணவனின் ஆடைகளைக் களைந்து.. பெல்ட்டால் அடித்து மிரட்டிய சக மாணவர்கள்… பள்ளி விடுதியில் கொடூர ரேகிங்…!!”
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தின் நிர்சா பகுதியில் அமைந்துள்ள ‘பிஎம் ஸ்ரீ ஜவஹர் நவோதயா வித்யாலயா’ பள்ளியின் விடுதியில், பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் சக மாணவர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். விடுதியில் மொபைல் போன் மூலம் பணம் அனுப்புவது தொடர்பாக மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு, பின்னர் பெரிய வன்முறையாக மாறியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவனை அதே வகுப்பைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் ஒரு அறைக்குள் அடைத்து வைத்து, அவரது ஆடைகளைக் கலைந்து, பெல்ட்டுகளால் இரக்கமின்றி அடித்துத் துன்புறுத்தியுள்ளனர்.
இந்தக் கொடூரமான தாக்குதலை அந்த மாணவர்கள் வீடியோவாகவும் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர், அது தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பாதிக்கப்பட்ட மாணவனை வலுக்கட்டாயமாக யோகா முத்திரையில் அமர வைத்து பெல்ட்டுகளால் அடிப்பதுடன், கட்டாயப்படுத்தி புஷ்-அப்கள் எடுக்க வைப்பதும் பதிவாகியுள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாகவும் அவர்கள் மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன அந்த மாணவர், வலியோடு இரண்டு நாட்கள் பள்ளி செவிலியரிடம் மாத்திரை வாங்கிச் சாப்பிட்டு அமைதியாக இருந்துள்ளார். ஆனால் வலி தாங்க முடியாமல் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, தனது பெற்றோருக்குத் தகவல் கொடுத்துள்ளார். தற்போது அவர் தன்பாத் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் பள்ளி விடுதியின் பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தின் மீதான பல கேள்விகளை எழுப்பியுள்ளது. பள்ளி விதிகளின்படி விடுதியில் மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்த அனுமதியில்லை என்றும், சில பெற்றோர் ரகசியமாக குழந்தைகளுக்கு போன் கொடுத்து அனுப்புவதே இதற்கு முக்கியக் காரணம் என்றும் பள்ளி நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக விடுதி அறைகளுக்குள் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரிக்க ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகளான அந்த ஐந்து மாணவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளி நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.
