LATEST NEWS
“உணர்ச்சி உந்துதலில் பேசிட்டேன்.. எனக்கும் வருத்தம்தான்..!” திடீரென யூடர்ன் அடித்த ஆ.ராசா.. சர்ச்சை பேச்சுக்கு எக்ஸ் தளத்தில் விளக்கம்..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் மாண்புமிகு அமைச்சர் சி.டி. நிர்மல்குமார் குறித்துப் பொதுமேடையில் அவதூறாகப் பேசிய விவகாரத்தில், திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் துணைப் பொதுச்செயலாளருமான ஆ.ராசா எக்ஸ் தளத்தில் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார். தவெக அமைச்சர் நிர்மல்குமாரின் தாயாரைக் குறித்து அவர் பேசிய பேச்சுக்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினரிடமிருந்தே கடுமையான கண்டனங்கள் எழுந்த நிலையில், இந்தத் திடீர் விளக்க அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார்.
தனது எக்ஸ் சமூக ஊடகப் பதிவில் அவர், தியாகத்தில் விளைந்த ஒரு தலைவனின் அடையாளத்தை உள்நோக்கத்தோடு மீண்டும் மீண்டும் பொய் என்று கொச்சைப்படுத்தி ஏளனம் செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இதனால் தனக்கு ஏற்பட்ட ஆழமான வலியை உணர்த்துவதற்காக, ஏளனம் செய்தவரின் அடையாளத்தையும், உண்மையையும் உணர்ச்சி உந்துதலின் காரணமாகத் தான் கேள்விக்குள்ளாக்கியதில் எனக்கும் வருத்தம்தான் என்று கூறி இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றுள்ளார். இந்த வருத்த அறிவிப்பு தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது
