LATEST NEWS
“பணி நேரம் முடிஞ்சா என்ன..? வீட்டுக்கு யாரும் போகக் கூடாது..!” ஊழியர்களை வங்கிக்குள் பூட்டி வைத்த மேலாளர்..! சோஷியல் மீடியாவில் பெரும் சர்ச்சை..!!
சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் காணொளி ஒன்று பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்கி ஒன்றின் கிளையில், பணி நேரம் முடிந்த பின்னரும் ஊழியர்கள் வீட்டிற்குச் செல்ல முடியாதபடி, அதன் மேலாளர் வங்கியின் முதன்மை நுழைவு வாயிலைப் பூட்டுவது போன்ற காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன. இருப்பினும், இந்தக் காணொளி எங்கு, எந்த வங்கியில், எப்போது படமாக்கப்பட்டது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவலோ அல்லது சுயாதீனமான உறுதிப்படுத்தலோ இன்னும் வெளியாகவில்லை.
அந்தக் காணொளியில், வங்கி மேலாளராகக் கூறப்படும் நபர் வங்கியின் கதவை மூடிப் பூட்டுவதைக் காண முடிகிறது. பணி நேரம் முடிந்துவிட்டதால் தங்களை வீட்டிற்குச் செல்ல விடுமாறு ஊழியர்கள் அவரிடம் பலமுறை கோரிக்கை விடுக்கின்றனர். மேலும், கூடுதல் நேரம் பணிபுரிவது கட்டாயமில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால், மேலாளர் அவற்றைப் பொருட்படுத்தாமல், “கொடுக்கப்பட்ட பணிகள் அனைத்தும் முழுமையாக முடிவடையும் வரை யாரும் வெளியில் செல்ல முடியாது” எனக் கூறிவிட்டு உள்ளேச் செல்கிறார்.
இக்காணொளி இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, நிறுவனங்களின் நச்சுத்தன்மை வாய்ந்த வேலைச் சூழல் மற்றும் ஊழியர்களின் உரிமைகள் குறித்தான விவாதங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. ஊழியர்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்களை அலுவலகத்திற்குள் பூட்டி வைப்பதும், கட்டாயப்படுத்தி பணிபுரிய வைப்பதும் சட்டப்படியும் மனிதநேய அடிப்படையிலும் முற்றிலும் தவறானது என்று இணையவாசிகள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
