LATEST NEWS
“இது உங்க போலீஸ் ஸ்டேஷன் கிடையாது!”.. பாதுகாப்பு அதிகாரிகளிடம் மல்லுக்கட்டிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்… அரசு மருத்துவமனையில் பரபரப்பு..!!
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் குறித்துப் பொதுக்கூட்டத்தில் அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், திருச்செந்தூர் திமுக எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடியில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். சென்னை உயர் நீதிமன்றம் இவரது முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்த சில மணி நேரங்களிலேயே காவல் துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. கைதின் போது தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் வருவதாகக் கூறியதை அடுத்து, அவர் பலத்த பாதுகாப்புடன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். பரிசோதனைகளுக்குப் பின் வெளியே வந்த அவரைச் செய்தியாளர்களிடம் பேச விடாமல் தடுக்க முயன்ற காவல் அதிகாரிகளிடம், “இது உங்க போலீஸ் ஸ்டேஷன் கிடையாது நான் பேச வேண்டியதை மருத்துவமனையில் வைத்துப் பேசத்தான் செய்வேன்” என்று ஆவேசமாகக் கத்தியபடி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், தன் மீதான விசாரணை போக்கில் காவல் துறையினர் மூலம் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளும் தவெகவில் இணையுமாறு கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகப் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார். தான் என்றென்றும் திமுகவின் தீவிரத் தொண்டனாகவே இருப்பேன் என முழக்கமிட்ட அவரை, காவல்துறையினர் உடனடியாகக் காரில் ஏற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றதால் மருத்துவமனை வளாகம் சில மணி நேரம் போர்க்களமாகக் காட்சியளித்தது.
