CRIME
அடப்பாவிங்களா..? நள்ளிரவில் தாயின் சடலத்தை தோண்டி எடுத்து.. மகன்கள் செய்த காரியம்… சாக்கு மூட்டையை பிரித்துப் பார்த்த போலீஸுக்கு காத்திருந்த பகீர் அதிர்ச்சி..!!
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம், மாலேபென்னூர் பகுதியைச் சேர்ந்த ஈரம்மா (58) என்ற பெண் கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்தார். இவரது மரணத்தில் சந்தேகம் இருந்ததால், காவல்துறையினர் இயற்கை மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். உடற்கூறாய்வு முடிந்து சடலம் அவரது மகன் மஞ்சுநாத்திடம் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கிராமத்தில் உள்ள அவர்களின் சொந்த விவசாய நிலத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஜூலை 18-ஆம் தேதி நள்ளிரவில் ஈரம்மாவின் மகன்களான மஞ்சுநாத் மற்றும் அவரது மூத்த சகோதரர் வெங்கடேஷா ஆகிய இருவரும் அதிகாரிகளின் எந்தவித அனுமதியும் இன்றி, புதைக்கப்பட்ட தங்களது தாயின் சடலத்தை நிலத்திலிருந்து சட்டவிரோதமாக தோண்டி எடுத்தனர். பின்னர், அந்தச் சடலத்தை தங்களது மோட்டார் சைக்கிளில் ஏற்றி, தாவணகெரே நகரத்தை நோக்கி ரகசியமாகக் கொண்டு செல்ல முயன்றனர்.
அப்போது அப்பகுதியில் நள்ளிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர், மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கு இடமான முறையில் மூட்டையுடன் சென்ற இருவரையும் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அந்த சோதனையில், அவர்கள் தோண்டி எடுக்கப்பட்ட தாயின் சடலத்தைக் கடத்திச் சென்றது அம்பலமானது. இதையடுத்து சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர், அதனை உடனடியாக அரசு மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பி வைத்தனர்.
நடந்து வரும் காவல்துறை விசாரணையில் இருந்து தப்பிக்கவும், ஆதாரங்களை முற்றிலும் அழிக்கும் நோக்கத்திலுமே இவர்கள் சடலத்தைக் கடத்திச் சென்றதாக தலைமைக் காவலர் சாந்தராஜ்குமார் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் இரு சகோதரர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
