LATEST NEWS
“ஆத்துல ஒரு கால், சேத்துல ஒரு கால் பாத்திருப்பீங்க… இது தண்டவாளத்துல ஒரு கால் வச்ச விசித்திர மனிதர்..! லைக்ஸ் வாங்க இப்படி ஒரு அலப்பறையா..?!”
சமூக வலைதளங்களில் ஒரு ரயில் நிலையத்தின் திகைப்பூட்டும் வீடியோ ஒன்று வேகமாகப் பரவி வருகிறது. ஒரு நபர் ரயில்வே தண்டவாளத்தின் மிக அருகில் இருக்கும் பாதுகாப்புத் தடுப்பின் மீது அமர்ந்திருக்கிறார். அந்த சமயத்தில் உள்ளூர் ரயில் ஒன்று மிக வேகமாக அவரை நோக்கி நகர்ந்து வருகிறது. முதல் பார்வையில் அனைத்தும் சாதாரணமாகத் தெரிந்தாலும், அடுத்த சில நொடிகளில் அரங்கேறும் காட்சி பார்ப்பவர்களைப் பதற வைக்கிறது.
ரயில் மிக அருகில் வந்த பிறகும் அந்த நபர் அங்கிருந்து நகரவோ அல்லது எழுந்து செல்லவோ முயற்சி செய்யவில்லை. ரயில் அவரை நெருங்கும் போது, அதன் மீது மோதாமல் இருக்கத் தனது உடலை மட்டும் சற்றே பின்புறமாகச் சாய்த்துக் கொள்கிறார். அடுத்த சில கணங்களில், ரயில் அவரது உடலை உரசுவது போல சில இன்ச் இடைவெளியில் கடந்து செல்கிறது. சிறிய தவறு நடந்திருந்தாலும் அது பெரிய விபத்தாக மாறியிருக்கும், ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் மயிரிழையில் உயிர் தப்புகிறார்.
தற்போது இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டு பல லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. இணையவாசிகள் பலரும் சமூக வலைதளங்களில் சில நொடிகள் பிரபலமாக வேண்டும் அல்லது ‘லைக்ஸ்’ பெற வேண்டும் என்பதற்காக இப்படி உயிருக்கு ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதைக் கடுமையாகக் கண்டித்து வருகின்றனர். ரயில் மற்றும் தண்டவாளங்களின் அருகில் இது போன்ற ஆபத்தான ஸ்டண்ட்களை யாரும் செய்ய வேண்டாம் என்றும், இது போன்ற கவனக்குறைவு உயிருக்கே ஆபத்தாய் முடியும் என்றும் மக்கள் எச்சரித்து வருகின்றனர்.
