LATEST NEWS
கலைஞர் தலையைக் கொய்வேன் என்ற போதே கைது செய்யல… திமுகவை ஜெயில்ல வச்சு அழிக்க நினைச்சா அவன் மகா மடையன்… தவெக அரசை வெளுத்து வாங்கிய ஆர்.எஸ்.பாரதி..!!
விளாத்திக்குளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, புதுசா ஆட்சிக்கு வந்திருக்கறவங்களுக்கு யாராவது வரலாற்றைச் சொல்ல வேண்டும் என்று சாடிய அவர், திமுகவினர் எமர்ஜென்சியையே பார்த்தவர்கள் என்றும், இதுபோன்ற அச்சுறுத்தல்களைக் கண்டு பயப்படும் கட்சி அல்ல என்றும் ஆவேசமாகத் தெரிவித்தார்.
ஜனநாயகத்தில் சகிப்புத்தன்மை அவசியம் என்று குறிப்பிட்ட ஆர்.எஸ்.பாரதி, எம்ஜிஆர் கட்சி தொடங்கிய காலத்தில் கே.ஏ.கிருஷ்ணசாமி மேடையிலேயே “கருணாநிதியின் தலையைக் கொய்து வருவேன்” என்று பேசியபோதும் கலைஞர் அவர் மீது வழக்குத் தொடரவில்லை என்ற வரலாற்றைச் சுட்டிக்காட்டினார். தற்போதைய தவெக ஆட்சியில் 60 நாட்களுக்குள் அனிதா ராதாகிருஷ்ணனைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், திமுக எம்.எல்.ஏ-க்களைக் கட்சி மாற்ற முடியாத விரக்தியில்தான் இந்த அரசு இத்தகைய வழக்குகளைக் கையாள்கிறது என்றும் குற்றம் சாட்டினார்.
மேலும், தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் தினமும் நடந்து கொண்டிருப்பதைத் தடுக்க நேரமில்லாத காவல்துறை, திமுகவினரையும் சமூக வலைதளங்களில் விமர்சிப்பவர்களையும் கைது செய்வதிலேயே குறியாக உள்ளது என்று சாடினார். “திமுக மீது வழக்குப் போட்டு ஜெயிலுக்கு அனுப்பி அழிச்சிடலாம்னு நினைச்சா அவனை விட உலக மகா மடையன் யாரும் இருக்க முடியாது” எனக் குறிப்பிட்ட அவர், எத்தனை வழக்குகள் வந்தாலும் அதைச் சட்ட ரீதியாகச் சந்திக்கத் தயாராக இருப்பதாக எச்சரித்துள்ளார்.
