LATEST NEWS
“முதல்வர் விஜய் பகிரங்க மன்னிப்பு கேட்கணும்” இல்லாவிட்டால் ஆதரவை மறுபரிசீலனை செய்வோம்… தவெக அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சிபிஎம்..!!
இடதுசாரி மாணவர் அமைப்புகளின் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை உளவு பார்க்கவும், கண்காணிக்கவும் சுற்றறிக்கை அனுப்பிய தமிழக தலைமைச் செயலாளரை உடனடியாக அரசு பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். மாணவர்களின் குரலை ஒடுக்கும் இந்த பிரிட்டிஷ் காலத்து ஏதேச்சதிகார நடவடிக்கை ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும், இதற்குப் பொறுப்பேற்று முதல்வர் விஜய் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் தங்களின் கடுமையான கண்டனத்தை முன்வைத்துள்ளார்.
மேலும், தவெக அரசுக்குத் தாங்கள் ஏறி வந்த ஏணியாக இருந்து வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருவதை முதலமைச்சர் மறந்துவிடக் கூடாது என்று சுட்டிக்காட்டியுள்ளார். தங்களை ஒடுக்கும் முயற்சிகளில் அரசு இயந்திரம் ஈடுபட்டால், தவெக அரசுக்கு அளித்து வரும் இந்த ஆதரவை மறுபரிசீலனை செய்ய நேரிடும் என்று கே.பாலகிருஷ்ணன் பகிரங்கமாக எச்சரித்துள்ளார். இடதுசாரிகளின் ஆதரவை விலக்கிக் கொண்டால் இந்த அரசு நீடிக்குமா என்ற கேள்வியையும் அவர் தவெக தலைமைக்கு எழுப்பியுள்ளார்.
அரசு நிர்வாகத்தின் இந்த சுற்றறிக்கை விவகாரம், தவெக கூட்டணிக்குள் பெரும் புயலைக் கிளப்பியுள்ளதுடன், தமிழக அரசியலில் தற்போதைய ஆட்சிக்கு ஒரு கடுமையான நெருக்கடியை உருவாக்கியுள்ளது. கடந்த சில தினங்களாகவே இந்த சுற்றறிக்கைக்கு எதிராக இடதுசாரிகள் மற்றும் மாணவர் அமைப்புகள் போர்க்கொடி தூக்கி வரும் நிலையில், சிபிஎம் கட்சியின் இந்த நேரடி எச்சரிக்கை தவெக அரசை தற்காப்பு நிலைக்குத் தள்ளியுள்ளது.
