500க்கும் மேற்பட்ட படங்களில்… லொகேஷன் மேனேஜராக பணி புரிந்த படப்பிடிப்பு ஏற்பாட்டாளரின் வாழ்க்கை பற்றி அவரே அளித்த வைரல் பேட்டி …. - Cinefeeds
Connect with us

Uncategorized

500க்கும் மேற்பட்ட படங்களில்… லொகேஷன் மேனேஜராக பணி புரிந்த படப்பிடிப்பு ஏற்பாட்டாளரின் வாழ்க்கை பற்றி அவரே அளித்த வைரல் பேட்டி ….

Published

on

திரைப்படங்களைப் பார்க்கும்போது சண்டைக் காட்சிகளில் கண் இமைப்பதற்குள் சரேலென வேகமாகப் பறந்து செல்லும் வாகனங்களை ஓட்டுபவர்களை நமக்குத் தெரியாது. முன் பக்கம் உயர்த்தி,இரண்டு சக்கரத்தில் எகிறிப்பாயும் காருக்குள் இருப்பது யார் என்றோ, கர்ணம் அடித்து சறுக்கி விழும் மோட்டார் சைக்கிளில் இருப்பவர் முகம் யாருடையது என்றோ எவருக்கும் தெரியாது.

பிரபல கதாநாயகர்களை மிரட்டும் வில்லனின் அடியாட்களில் ஒருவராக வந்து பேசும் அந்த நடிகரின் முகமோ நமக்குத் தெரியாது.ஒரு படத்தின் பரபரப்புக்காகத் தேவைப்படும் இவர்களுக்குச் சரியான அடையாளமும் அங்கீகாரமும் கிடைப்பதில்லை.இந்த வரிசையில் உள்ளவர் தான் நடிகர் டி. குமரன் . தற்பொழுது இவரது வாழ்க்கையை பற்றி இந்த சிறப்புத் தொகுப்பில் நாம் பார்க்கலாம்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, ‘நான் பத்து வயதில் இருந்து கூத்துபட்டறையில் கற்றுக்கொண்டு இயங்கி வருகிறேன் .நானே ஒரு கூத்துப் பட்டறையைப் பாண்டிச்சேரியில் வைத்துள்ளேன்.ஏராளமான விழாக்கள் உள்ளூர், வெளியூர், வெளிநாடு சார்ந்த விழாக்கள் ,ஆலய விழாக்கள் போன்றவற்றில் நாங்கள் நாடகங்கள், கூத்துகள், என்று மாறுவேடம் பூண்டு நடித்துள்ளோம்.

குறிப்பாக நான் 35 ஆண்டுகளாக நான் காளி வேடம் போட்டு, தோன்றி வருகிறேன். 15 ஆண்டுகளாக குறத்தி வேடம் போட்டு நடித்து வருகிறேன்.பாண்டிச்சேரியில் நான் ஒரு கூத்துக் கலைஞனாகப் பரவலாக அறியப்பட்டவன். நிறைய கற்றுக் கொண்டும் கற்றுக் கொடுத்தும் வருகிறேன். எனக்குச் சின்ன வயதிலேயே சினிமா மீது இனம் புரியாத ஆர்வம் வந்தது .நான் அடிப்படையில் ஒரு கூத்து கலைஞன் அல்லவா?

நான் ஒரு கூத்து கலைஞனாக இருந்தாலும் எனக்கு வண்டி வாகனங்கள் மீது ஆர்வம் உண்டு. ஆட்டோ ஓட்டுநர்,வாகனங்கள் ஓட்டுநர், மெக்கானிக் என்று எனக்கு இன்னொரு பக்கம் உண்டு. பாண்டிச்சேரி ராஜா திரையரங்கில் ஆட்டோ ஓட்டினேன். திரையரங்கிலும் பணியாற்றினேன். சொந்தமாக வாங்கி 15 ஆட்டோக்கள், டெம்போக்கள் என்று ஓட்டியிருக்கிறேன். ராஜா திரையரங்கில் நிறைய படங்கள் பார்த்திருக்கிறேன்.

படம் ரிலீஸ் ஆகும் போது பெட்டி எடுத்துச் செல்வது ஒரு விழாவுக்கான கொண்டாட்டமான அனுபவம். சிறு சிறு படங்களை விநியோகமும் செய்துள்ளேன்.சினிமா மீதுள்ள ஆர்வத்தில் சென்னை வந்து ஏவிஎம் ஸ்டுடியோவில் நுழைய முயற்சி செய்வேன். வாசலிலேயே விரட்டி அடித்து விடுவார்கள். ஆனால் வண்டி வாகனங்களை மட்டும் உள்ளே விடுவார்கள். அப்படி ஒரு நாள் அதிகாலை 5 மணிக்கு ஆட்டோவில் வந்தேன். உள்ளே விட்டார்கள்.

ஒரு தளத்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.அதிகாலையில்தான் லைட்மேன்கள் மேலே ஏறுவார்கள்.நானும் அவர்களைக் கெஞ்சி மேலே ஏறினேன். ஒரு நாள் முழுக்க அங்கிருந்து நான் கீழேநடக்கும் படப்பிடிப்பை வேடிக்கை பார்த்தேன். அவர்கள் மதிய உணவு கீழே வரும் போது கூட , கீழே நான் இறங்கி வரவில்லை. ஏனென்றால் என்னை துரத்தி அடித்து விடுவார்களோ என்று பயம். இப்படி ஒரு நாள் முழுக்க காலை முதல் மாலை வரை சிறுநீர் கழிக்கக் கூட வராமல் மேலேயே இருந்தேன்.

அப்படி மெல்ல மெல்ல பழக்கம் வந்தது.படப்பிடிப்பில் அவசரமாக ஒரு டிரைவர் தேவை என்றால் ஆள் கிடைக்காமல் விழிப்பார்கள்.அப்போது திடீர் ஓட்டுநராக மாறி நான் ஓட்டுவதுண்டு. நான் அனைத்து வாகனங்களும் ஓட்டுவதால் மெல்ல மெல்ல பழக்கம் கிடைத்தது. படப்பிடிப்பு இடங்களில் அவசரத்திற்கு வாகனங்களை ஓட்டி நகர்த்தி அவர்களுக்கு உதவுவேன். எந்த வண்டியாக இருந்தாலும் நான் எடுப்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனாலும் வருமான நம்பிக்கை ஏதும் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் சினிமா நமக்குச் சரிப்பட்டு வராது என்று தோன்றியது. அதன்படி1995-ல் பாண்டிச்சேரி திரும்பி விட்டேன்.இனி சினிமாவே நமக்கு வேண்டாம் என்று ஒதுங்கி நான் என் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மீண்டும் சினிமாவுக்குள் வர எந்தச் சூழல் காரணமாக இருந்தது? இயக்குநர் அமீர் இயக்கிய மெளனம் பேசியதே படத்தில் லொகேஷன் பார்க்க எனக்கு ஒரு வாய்ப்பு வந்தது .

இத்தோடு சரி என்று தான் நான் வேலை பார்த்தேன்.ஆனால் பிறகு எனக்கு வந்த ஒரு போன் தான் என் வாழ்க்கையையே மாற்றியது. ஒரு நாள் பாண்டிச்சேரிக்குப் படப்பிடிப்புக்கு வந்த சத்யராஜ் சார் என்னை அழைத்தார். அந்தப் படம் ஐயர் ஐபிஎஸ். பாண்டிச்சேரியில் எந்த வேலை கொடுத்தாலும் குமரன் செய்து விடுவான் என்று கூறி என்னைக் கூப்பிட வைத்தார். அந்தப் படப்பிடிப்புக்கான இடங்களைக் கேட்டபோது நான் ஏற்பாடு செய்து கொடுத்தேன்.

அது மட்டுமல்ல நான் அந்தப் படத்தில் தோன்றி நடிக்கவும் வாய்ப்பு கொடுத்தார்.அதன்படி நான் அதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக நடித்தேன். அதற்கு முன்பு நான் வைகாசி பொறந்தாச்சு, கடவுள் போன்ற படங்கள் சில சிறு காட்சிகளில் வந்தாலும் ஐயர் ஐபிஎஸ் என்னால் மறக்க முடியாத படம்.இது நடந்தது 2000த்தில்.அதன் பிறகு எனக்கு மளமளவென லொகேஷன் பார்க்க வாய்ப்புகள் வந்தன. அதற்குப் பிள்ளையார் சுழி போட்டவர் சத்யராஜ் சார் தான் என்பேன்.

இப்படிப் பாண்டிச்சேரியிலேயே படப்பிடிப்புகளுக்கு ஏற்பாடு செய்வது, லொகேஷன்கள் ஏற்பாடு செய்வது,தயாரிப்பு நிர்வாகத்தை கவனித்துக் கொள்வது என்று மெல்ல மெல்ல வளர ஆரம்பித்தேன்.”பாண்டிச்சேரி படப்பிடிப்பா உடனே குமரனைக் கூப்பிடு “என்கிற அளவிற்கு வந்துவிட்டேன். எல்லாமே ஒருவர் மூலம் ஒருவர் என்று கூறிவந்த வாய்ப்புகள் தான். இப்படி இதுவரை சுமார் 500 படங்களிலும் , 500 விளம்பரங்களிலும், 200 பாடல்களிலும் நான் பணியாற்றி இருக்கிறேன்.

பாண்டிச்சேரியில் எங்கு படப்பிடிப்பு நடந்தாலும் என்னைத் தொடர்பு கொள்கிற அளவுக்கு நான் வளர்ந்திருக்கிறேன். படப்பிடிப்பு ஏற்பாடு செய்த அனுபவங்களில் மறக்க முடியாதவை?இயக்குநர் கே வி ஆனந்த் அவர்கள் எனக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்தார் .அவரது அயன் ,மாற்றான், காப்பான், அனேகன் போன்ற படங்கள் முழுக்க பாண்டிச்சேரியில்தான் படபிடிப்பு நடக்கும். அயன் படமே 40 நாட்கள் அங்கு நடந்தது.

அவரது வேலாயுதம் படத்திற்காகப் பாலம் உடைந்து விழுவது போன்ற காட்சியை எடுக்கத் தமிழ்நாட்டில் அனுமதியில்லை. இங்கே தான் எடுக்கப்பட்டது. லிங்குசாமி அவர்களின் படங்கள் தொடர்ந்து இங்கேதான் நடக்கும் .வேட்டை அப்படி நடந்தது. விக்ரம் சார் நடித்த ராஜபாட்டை இங்குதான் நடந்தது.விஷால் சார் படங்கள் தொடர்ந்து இங்கு தான் நடக்கின்றன.தனுஷின் அனேகன், பட்டாசு போன்ற படங்களும் இங்கு படப்பிடிப்பு நடந்தவைதான்.

விஜய் ஆண்டனி அவர்களுடன் பிச்சைக்காரன் படத்தில் பணியாற்றினேன். படப்பிடிப்பு இடங்கள் ஏற்பாடு செய்தேன்.அந்தப் படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பும் கொடுத்தார்.படத்தின் கதைப்படி அவர் முதன் முதலில் பிச்சை எடுக்கச் செல்லும் காட்சியில் உனக்குக் கை கால் எல்லாம் நன்றாகத் தானே இருக்கிறது என்று அவரைக் கேலி செய்து அடிப்பது நான் தான்.

விஜயகாந்த் அவர்களின் சபரி படத்தில் நான் இப்படி அனுமதி வாங்கிக் கொடுத்தேன். அவர் விருதகிரி படம் எடுத்த போது தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சியில் அவருக்கு இங்கு அனுமதி கிடைக்கவில்லை. எங்கு போனாலும் பிரச்சினை வந்தது .அப்போது நான் அவருக்குப் பாண்டிச்சேரியில் இடங்களைத் தேர்வு செய்து அனுமதி வாங்கிக் கொடுத்தேன். குறிப்பாகப் பாண்டிச்சேரி பிரெஞ்ச் சிறையில் அனுமதி வாங்கிக் கொடுத்தேன் அதை வெளிநாடு போல் மாற்றிச் சண்டைக் காட்சிகள் எடுத்தார்கள்.

எனது வேலைகள் பற்றி மிகவும் மகிழ்ந்தார் .யாரும் செய்யாததை நீ செய்தாய் என்றார். கமல் அவர்களின் தசாவதாரம் படத்திற்கு நான் இடங்களைத் தேர்வு செய்து அனுமதி வாங்கிக் கொடுத்தேன். தசாவதாரம் படத்தில் நடித்த வெள்ளைக்காரர்களை எல்லாம் நான் தான் அழைத்து வந்தேன் .கமல் சாரிடம் இவர் தான் வெள்ளைக்காரர் என்றால் உடனே நம்பி விட மாட்டார்.வெள்ளைக்காரர்களில் பல ரகம் உண்டு.

அவருக்கு இங்கிலாந்து காரருக்கும் பிரெஞ்சுக்காரருக்கும் ஜெர்மனிக்காரருக்கும் வித்தியாசம் தெரியும் முகத்தைப் பார்த்து, மூக்கைப் பார்த்து அவர், இவர் இந்த நாட்டுக்காரர் என்று கண்டுபிடித்து விடுவார்.தசாவதாரம் படத்தில் வரும் ஜார்ஜ் புஷ் கேரக்டருக்கான வெள்ளைக்காரரை நான் தான் ஆரோவில் இருந்து அழைத்து வந்தேன்.அந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கு ,பாண்டிச்சேரி கடற்கரையில் 150 அடி நீளத்திற்கு டிராலி போட்டுப் படமாக்கினார்கள்.

உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நண்பேண்டா படத்தின் போது ஜெயலலிதா ஆட்சி இருந்ததால் தமிழ்நாட்டில் படப்பிடிப்பு நடத்துவதில் பிரச்சினை இருந்தது. எங்குமே நடத்த விடவில்லை. திருச்சியில் செட் எல்லாம் போட்டுப் படப்பிடிப்பு நடத்த முடியாமல் கலைத்து விட்டார்கள். அப்படிப்பட்ட நிலையில் அவருக்கு நான் பாண்டிச்சேரியில் அனுமதி வாங்கிக் கொடுத்து 20 நாட்கள் படபிடிப்பு நடந்தது.

அது மட்டுமல்ல சைக்கோ, இப்படை வெல்லும் போன்ற படங்களுக்கும் இடங்களை நான் ஏற்பாடுகள் செய்தேன்.பாண்டிச்சேரியில் சைக்கோ படப்பிடிப்பை முடித்துவிட்டுத்தான் அவர் தேர்தல் பிரச்சாரத்திற்குப் புறப்பட்டார். சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்மரெட்டி படத்திற்குப் பாண்டிச்சேரியில் இடங்களுக்கு அனுமதி வாங்கி கொடுத்தேன்.கே ஜி எஃப் 1 , 2 என இரண்டு படங்களுக்கும் நான் அனுமதி வாங்கிக் கொடுத்துள்ளேன். தமிழ் ,தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று இப்படி ஏராளமான படங்களுக்கு நான் இந்த விஷயத்தில் உதவி இருக்கிறேன்.

இப்போது நான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஜெய்லர் படத்தில் நடிக்கிறேன் .டீசல் படத்திலும் நடிக்கிறேன்.பிரபுதேவா அவர்களின் ஜல்சா படத்தில் எங்கள் குழுவினரின் நடனம் இடம்பெற்றுள்ளது அதேபோல் பிச்சைக்காரன் 2 படத்திலும் எங்களது நடனம் இடம்பெற்றுள்ளது.மேலும் 4 புதிய படங்களிலும் நடித்து வருகிறேன். தற்பொழுது இவரின் இந்த பதிவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.