LATEST NEWS
“ரூ.3,700 கோடி காலி!”.. ஈரான் போரால் அமெரிக்காவுக்கு வந்த சோதனை.. டிரம்ப் அரசுக்கு எதிராக பொங்கிய செனட் உறுப்பினர்கள்.. அமெரிக்காவில் பெரும் சர்ச்சை..!!
ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளுக்காக இதுவரை சுமார் 3,700 கோடி ரூபாய் செலவாகியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்ஸெத் செனட் சபைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையின் ஆதரவோடு ராணுவ நிதி, விவசாயிகளுக்கான உதவி மற்றும் வாக்களிப்பு சட்ட மாற்றங்கள் உள்ளடக்கிய குடியரசுக் கட்சியின் 95 பில்லியன் டாலர் பட்ஜெட் தொகுப்பு குறித்த விவாதத்தின் போது இந்த விவரம் வெளியானது. ராணுவ நடவடிக்கைகளைத் தொய்வின்றித் தொடரவும், பென்டகனின் வளங்களை மீண்டும் நிரப்பவும் அதிபர் டிரம்ப் கோரியுள்ள கூடுதல் பாதுகாப்பு நிதியை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று செனட் நிதி ஒதுக்கீட்டுக் குழுவிடம் ஹெக்ஸெத் வலியுறுத்தினார்.
ஆனால், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட் உறுப்பினர்கள் இந்த நிதிக்கோரிக்கையின் அளவு மற்றும் நிர்வாகத்தின் போர்க்கால உத்திகள் மீது கடுமையான எதிர்ப்பையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தனர். மூத்த செனட் உறுப்பினர் பாட்டி முர்ரே பேசுகையில், அமெரிக்கா மீண்டும் ஒரு முடிவில்லாத போருக்குள் நுழையும் அபாயத்தில் இருப்பதாகவும், போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று டிரம்ப் பலமுறை கூறியபோதிலும் தற்போது கூடுதலாக 70 பில்லியன் டாலர் வரை நிதி கேட்பது முரண்பாடாக உள்ளதாகவும் எச்சரித்தார். இதனிடையே, எந்தவித மாற்றமும் இன்றி இந்த பட்ஜெட் தீர்மானத்தை உடனடியாக அங்கீகரிக்குமாறு வெள்ளை மாளிகையும், அதிபர் டிரம்பும் சட்டமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த விசாரணையின் போது, ஈரானில் உள்ள பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட கொடூரமானத் தாக்குதல் குறித்த பென்டகனின் அதிகாரப்பூர்வ அறிக்கையை உடனடியாகச் சமர்ப்பிக்குமாறு செனட் உறுப்பினர்கள் ஹெக்ஸெத்தை வலியுறுத்தினர். அந்த அறிக்கை தாக்கல் செய்யப்படாவிட்டால், பாதுகாப்புச் செயலரின் அதிகாரப்பூர்வ பயணங்களுக்கான நிதி நிறுத்தி வைக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் போர் பட்ஜெட் கோரிக்கை மற்றும் ஈரான் விவகாரம் அமெரிக்க அரசியலில் பெரும் காரசாரமான விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
