LATEST NEWS
“பெங்களூரு சாலையில் ஒரு பாகுபலி ட்விஸ்ட்…! ரிகவரி வண்டிக்கு வெயிட் பண்ணாம… ஒரே ஆளா களமிறங்கிய ‘தார்’ ஹீரோ..! இணையத்தைக் கலக்கும் வீடியோ..!!”
பெங்களூரின் பரபரப்பான சாலையில், பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்தமான அரசுப் பேருந்து ஒன்று திடீரென பழுதாகி நடுரோட்டில் நின்றது. இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அலுவலகச் செல்பவர்கள், பள்ளிப் பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் நீண்ட நேரமாகக் காத்துக்கிடக்கும் சூழல் உருவானது. பேருந்தை அங்கிருந்து அகற்ற மீட்பு வாகனம் வரும் வரை அனைவரும் காத்திருக்க வேண்டியிருந்தது.
அப்போது அந்த வழியே வந்த மஹிந்திரா தார் காரின் ஓட்டுநர், மீட்பு வாகனத்திற்காகக் காத்திருக்காமல் உடனடியாக உதவ முன்வந்தார். தனது தார் காரின் மூலம் அந்த பெரிய பேருந்தைக் கயிறு கட்டி மெதுவாக இழுத்து, சாலையின் ஓரமாகப் பாதுகாப்பாகக் கொண்டு சென்று நிறுத்தினார். ஒரு பெரிய அரசுப் பேருந்தை ஒரு SUV கார் இழுத்துச் செல்லும் இந்த அரிய காட்சியை அங்கிருந்த மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து, தங்களது கைபேசியில் வீடியோ எடுத்தனர்.
தார் ஓட்டுநரின் இந்தச் சமயோசிதமான செயலால் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்பட்டு, சில நிமிடங்களிலேயே வாகனப் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பியது. இந்த நிகழ்வின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மஹிந்திரா தார் காரின் திறனையும், அதைவிட உடனடியாகச் செயல்பட்டு மக்களுக்கு உதவிய அந்த ஓட்டுநரின் நல்மனதையும் நெட்டிசன்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.
