LATEST NEWS
பேரவையில் தப்பு தப்பாக படித்த தவெக MLA பல்லவி.. இது எனக்கு புதுசுங்க… “எதுவும் தப்பா பேசிருந்தா மன்னிச்சிக்கோங்க” என சபாநாயகரிடம் மன்னிப்பு..!!
சட்டப்பேரவையில் நேற்று பேசிய திருவிக நகர் தவெக பெண் எம்எல்ஏ பல்லவி, தான் முதல்முறை அவையில் பேசுவதாகவும், இதனால் சற்றே பதற்றமாக இருப்பதாகவும் தெரிவித்தார். அவர் ஆரம்பம் முதலே தமிழை தப்பு தப்பாக படித்துக்கொண்டிருந்தார். அப்போது அவையை நடத்திக் கொண்டிருந்த மாற்று சபாநாயகர் தளவாய் சுந்தரம் குறுக்கிட்டு, நீங்கள் எதற்கும் தயங்காமல் நிறுத்தாமல் பேசுங்கள், இதில் எந்தத் தவறும் இல்லை என்று கூறி அவருக்கு தைரியமூட்டி பேச வைத்தார்.
அதனைத் தொடர்ந்து தனது உரையைத் தொடர்ந்த எம்எல்ஏ பல்லவி, தான் அவையில் தவறாக ஏதேனும் பேசினால் தயவுசெய்து மன்னித்துவிடுமாறு அவையினரிடம் கேட்டுக்கொண்டார். மேலும், தனது தொகுதி ஒரு தனித் தொகுதி என்பதால் சிலர் இதனைத் தனியாகப் பிரித்துப் பார்க்கிறார்கள் என்றும், ஆனால் இங்கு தலித் மக்கள் என்று கூறி நம்மை யாரும் தள்ளி வைக்கவில்லை என்றும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
தொடர்ந்து தனது தொகுதி சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்த அவர், திருவிக நகர் தொகுதியில் தற்போது நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சனை மற்றும் போதைப்பொருள் புழக்கம் போன்ற முக்கிய பிரச்சனைகள் குறித்துப் பேசி, அவற்றுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். சட்டப்பேரவையில் முதல்முறையாகப் பேசிய தவெக பெண் எம்எல்ஏ-வின் இந்த நெகிழ்ச்சியான பேச்சு தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பரவலாகக் கவனிக்கப்பட்டு வருகிறது.
