LATEST NEWS
“பூஜையில அசைவம் சாப்பிடுறது தப்பே இல்லை… யார் எதைச் சாப்பிடணும்னு சொல்றதுக்கு இவர் யாரு..?” தீரேந்திர சாஸ்திரிக்கு பாஜக அமைச்சர் கொடுத்த மரண வெயிட் பதிலடி..!!
மேற்குவங்க மாநிலத்தில், பாகேஷ்வர் பாபா என்று அழைக்கப்படும் அர்ச்சகர் தீரேந்திர சாஸ்திரி மத ரீதியாக, இறைச்சி உண்பவர்களைப் போலிகள் என்று விமர்சித்திருந்தார். மேலும், துர்கா பூஜை உள்ளிட்ட பண்டிகையின் போது மேற்கு வங்க மக்கள் அசைவ உணவைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் பகிரங்கமாக வலியுறுத்தியிருந்தார். இது மேற்குவங்கத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், மற்ற வடமாநிலங்களைப் போல அல்லாமல், தனித்துவமான பாரம்பரியம் கொண்டுள்ளது. பொதுவாக வட மாநிலங்களில் விழாக்காலங்களில் அசைவம், பூண்டு, வெங்காயம் உள்ளிட்ட உணவுகளை மக்கள் எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், மேற்குவங்கத்தில் பண்டிகை காலங்களில் கால்நடைகளைப் பலியிட்டு உண்பது வழக்கமான ஒன்றாக உள்ளது.
இந்நிலையில், இது குறித்து மேற்குவங்க மாநிலத்தின் பாஜக அமைச்சர் திலீப் கோஷிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதில் அளித்த அவர், “துர்கா பூஜையின் போது ஆடு பலி கொடுக்கும் பாரம்பரியம் என்பது மேற்கு வங்கத்தில் காலங்காலமாக உள்ளது. அந்த இறைச்சி பிரசாதமாக உட்கொள்ளப்படுகிறது. இங்கு ஆட்டு இறைச்சி என்பது சர்ச்சைக்குரிய விஷயமல்ல. நான் மீன் சாப்பிடுகிறேன். வேறு இறைச்சி சாப்பிடுவதில்லை. ஆனால், யார் எதைச் சாப்பிட விரும்புகிறார்களோ? அவர்கள் அதைச் சாப்பிட அனுமதிக்கப்பட வேண்டும். தீரேந்திர சாஸ்திரி கூறியது என்பது அவரது தனிப்பட்ட கருத்து. துறவிகள் தங்கள் சொந்தக் கண்ணோட்டத்தில் பேசுகிறார்கள். சைவ உணவு ஆரோக்கியத்துக்கு நல்லது என்று கூறுகிறார்கள். ஆனால், மேற்கு வங்கத்தில் பல வகையான வழிபாட்டு முறைகளுடன் அசைவ உணவு நீண்ட காலமாக இருந்து வருகிறது. நாடு இருக்கும் வரை அன்னை காளி ஆட்டு இறைச்சியை உண்பார் என்றும் சிவன் உடுக்கையை வாசிப்பார் என்றும் சுவாமி விவேகானந்தர் கூறி இருக்கிறார்” என்று தெரிவித்தார்.
