LATEST NEWS
“மன அழுத்தம் தான் மிச்சம்”இந்த கொடுமையை எங்க போய் சொல்ல..? 64% இந்திய ஊழியர்கள் ஊதியமின்றி கூடுதல் நேரம் வேலை பார்ப்பதாக ஆய்வில் தகவல்..!
இந்தியாவில் 64 விழுக்காடு பணியாளர்கள் தங்களது வழக்கமான பணி நேரத்தைத் தாண்டி, எந்தவிதக் கூடுதல் ஊதியமும் இன்றி வேலை செய்து வருவதாக ஒரு அதிரடி ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.ஏடிபி ரிசர்ச் நிறுவனம் வெளியிட்டுள்ள ‘பீப்பிள் அட் வொர்க் 2026’ என்ற உலகளாவிய ஆய்வின் மூலம் இந்த அதிர்ச்சிகரமான உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.உலக அளவில் 36 நாடுகளைச் சேர்ந்த சுமார் 39,000 பணியாளர்களிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் இப்புள்ளிவிவரங்கள் திரட்டப்பட்டுள்ளன.மதிய உணவு இடைவேளையில் வேலை பார்ப்பது மற்றும் பணி நேரம் முடிந்த பிறகும் அலுவலகத்தில் தங்கிப் பணியாற்றுவது போன்றவை இந்த ‘ஊதியமில்லா கூடுதல் வேலை’ வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்த ஆய்வின்படி, இந்தியாவில் உள்ள பணியாளர்களில் 24 சதவீதம் பேர் வாரத்திற்கு 16 மணிநேரம் அல்லது அதற்கு மேல் கூடுதல் ஊதியமின்றி உழைக்கின்றனர்.மேலும் 40 சதவீதம் பேர் வாரத்திற்கு 6 முதல் 15 மணிநேரம் வரை இவ்வாறு பணிபுரிகின்றனர்.உலக அளவில் 16 மணிநேரத்திற்கும் மேலாக ஊதியமின்றி வேலை வாங்குவதில் இந்தியா முதலிடத்தில் உள்ள நிலையில், இதற்கு அடுத்தபடியாக துருக்கி (23%), ஆஸ்திரியா (21%) மற்றும் அமெரிக்கா (20%) ஆகிய நாடுகள் உள்ளன.அதே நேரத்தில் செக் குடியரசு (4%), சீனா (6%), ஜப்பான் (6%) போன்ற நாடுகளில் இத்தகைய சுரண்டல் மிகக் குறைந்த அளவிலேயே இருப்பதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இத்தகைய கூடுதல் நேர வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உற்பத்தித் திறனை எந்த வகையிலும் அதிகரிக்கவில்லை என்றும், மாறாகப் பணியாளர்களிடையே கடுமையான மன அழுத்தத்தையும் சோர்வையும் மட்டுமே உருவாக்குகிறது என்றும் இவ்வாய்வு எச்சரிக்கிறது.குறிப்பாக, சாதாரணப் பணியாளர்களை விட உயர் பதவிகளில் உள்ள அதிகாரிகளே (50%) அதிகளவில் இவ்வாறு உழைக்கிறார்கள்.அலுவலகத்திற்கு வந்து வேலை செய்பவர்களை விட, வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் ‘வொர்க் ஃபிரம் ஹோம்’ பணியாளர்களே இத்தகைய கூடுதல் நேரப் பணிச்சுமைக்கு அதிக அளவில் ஆளாகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
