LATEST NEWS
“நடுக் கடலில் உறைவிக்கும் போர்ப் பீதி..!” ஈரான் எல்லையைச் சுற்றி வளைத்த அமெரிக்கா… பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடுகள்..!!!
பாரசீக வளைகுடா மற்றும் சர்வதேச அளவில் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி கடல் பகுதியில், அமெரிக்கா தனது 20 போர்க்கப்பல்கள் மற்றும் விமானம் தாங்கி கப்பல்களை அதிரடியாக நிலைநிறுத்தியுள்ளது. ஈரானுடன் ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் சூழலிலேயே, அமெரிக்கப் பாதுகாப்புப் படைகளின் இந்த மாபெரும் ராணுவ நகர்வு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் போர் பதற்றத்தை மீண்டும் உருவாக்கியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலைத் தவிர்க்கப் பேச்சுவார்த்தைகள் தொடர்வதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ள போதிலும், சர்வதேசக் கடல்சார் வர்த்தகப் பாதைகளுக்கு இடையூறு விளைவித்தால் ஈரான் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் வர்த்தக மற்றும் கச்சா எண்ணெய் கப்பல்களுக்கு ஈரானிய கடற்படையால் எவ்வித ஆபத்தும் நேரிடக் கூடாது என்பதற்காகவே இந்தப் போர்க்கப்பல்கள் பிராந்திய எல்லைக்கு அருகே கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை ஈரானுக்குக் கொடுக்கப்படும் நேரடி ராணுவ அழுத்தமாகவே சர்வதேச அரசியலில் பார்க்கப்படுகிறது. ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை என்ற ராஜதந்திர நகர்வும், மறுபுறம் போர்க்கப்பல்கள் நிலைநிறுத்தம் என்ற ராணுவ அச்சுறுத்தலும் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்படுவது அப்பகுதியில் பெரும் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே வலுத்துவரும் இந்த மோதல் போக்கு, உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தை, விலை ஏற்றம் மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார வல்லுநர்கள் அஞ்சுகின்றனர்.
