LATEST NEWS
“எங்க முதுகில் ஏறி சவாரி செய்துட்டு இப்ப குத்திட்டீங்க…” ராகுல் காந்திக்கு எதிராக ஒட்டப்பட்ட பேனர்கள்… டெல்லியில் பரபரப்பு…!!
தலைநகர் டெல்லியில் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ‘இந்தியா’ கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ள வேளையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை விமர்சித்துப் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஏற்பட்ட பின்னடைவு மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையேயான முரண்பாடுகளுக்கு மத்தியில் இக்கூட்டம் நடக்கிறது. குறிப்பாகத் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தங்களது கூட்டணியை மாற்றிக் கொண்டதை வன்மையாகக் கண்டித்துள்ள தி.மு.க, டெல்லியில் நடைபெறும் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளது.
இத்தகைய அரசியல் சூழலில், டெல்லியில் வைக்கப்பட்டுள்ள காங்கிரசுக்கு எதிரான அந்தப் பேனர்களில் மம்தா பானர்ஜி, சரத் பவார் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்கள் அச்சிடப்பட்டுள்ளன. மேலும், அதில் “கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக எங்களது தோள் மீது சவாரி செய்துதான் காங்கிரஸ் கட்சி வளர்ந்தது; ஆனால், இறுதியாக எங்களது முதுகிலேயே குத்திவிட்டது” என்ற காரசாரமான வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மற்றும் மகளிருக்கான இடஒதுக்கீடு சட்ட மசோதாக்கள் மீண்டும் கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படும் வேளையில், எதிர்க்கட்சிகளின் இந்த உள்விவகார மோதல் தேசிய அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
