CINEMA
வடிவேலு மாதிரி இமாலய காமெடியனுக்கே டஃப் கொடுத்த விஜய்…விஜய்யோட இந்த ஒரு படத்தை பார்த்துட்டு தான் எஸ்.ஏ.சி முதன்முதலா பாராட்டினாராம்…சச்சின்’ படப்பிடிப்பில் நடந்த உண்மையை உடைத்த எஸ்.ஏ.சந்திரசேகர்…!
வைகை புயல்’ என்று தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் வடிவேலு, தற்போது திரைத்துறையில் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கி பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ‘மாமன்னன்’, ‘மாரீசன்’ ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றாலும், ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’, ‘சந்திரமுகி 2’, ‘கேங்கர்ஸ்’ ஆகிய படங்களில் அவரது காமெடி பெரியளவில் எடுபடவில்லை என்றும், பழைய பாடி லாங்குவேஜையே மீண்டும் பயன்படுத்துகிறார் என்றும் ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்தன. இருப்பினும், தோல்விகளைத் திருத்திக் கொண்டு அடுத்ததாக வெளியாகவிருக்கும் ‘பேங் பேங்’ மற்றும் ‘போர் முழக்கம்’ ஆகிய படங்கள் மூலம் பழையபடி ரசிகர்களைச் சிரிக்க வைப்பார் என்ற நம்பிக்கையில் திரையுலகம் காத்துக் கொண்டிருக்கிறது.
வடிவேலுவின் சினிமா பயணம் பல ஏற்ற இறக்கங்களைக் கொண்டது. 2011-ஆம் ஆண்டு காலகட்டத்தில் அசைக்க முடியாத உச்சத்தில் இருந்தபோது, மறைந்த நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்துடன் ஏற்பட்ட அரசியல் மோதல் காரணமாக அவர் திமுகவிற்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கினார். ஆனால், அந்தத் தேர்தலில் அதிமுக – தேமுதிக கூட்டணி வெற்றி பெற்றதால், வடிவேலு முற்றிலும் திரைத்துறையிலிருந்து ஓரங்கட்டப்பட்டு பல வருடங்கள் பட வாய்ப்புகளின்றித் தவித்தார். பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கம்பேக் கொடுத்துப் பயணித்து வரும் வடிவேலு, தளபதி விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு திரைத்துறையினர் பலரும் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்த நிலையிலும், இன்னும் அவரைச் சந்திக்காமல் இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது.
இப்படியான சூழலில், முதலமைச்சர் விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் மற்றும் வடிவேலுவின் திரைக்கூட்டணி குறித்துப் பேசிய அவர், “விஜய்யின் ஆக்டிங்கை நான் முதன்முதலில் மனதாரப் பாராட்டியது ‘சச்சின்’ படத்தில்தான். அந்தப் படத்தில் வடிவேலு போன்ற ஒரு இமாலய காமெடியன் இருந்தும், விஜய் தனது அசாத்திய பாடி லாங்குவேஜ் மூலம் வடிவேலுவையே ஓரங்கட்டித் தனியாகத் தெரிந்திருப்பார். வடிவேலுவுக்கு ஈடுகொடுத்து நடிப்பது சாதாரண விஷயமல்ல, அதற்கு அந்தப் படத்தின் இயக்குநர் ஜான் மகேந்திரனைத்தான் பாராட்ட வேண்டும். தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்தவுடனேயே, ‘மிகச்சிறப்பாக நடித்திருக்கிறாய்’ என்று விஜய்யை முதன்முதலாகப் பாராட்டினேன்” என்று அந்த சுவாரசிய நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.
