LATEST NEWS
மாக்னஸ் கார்ல்சனுக்கே மரண பயம் காட்டிய தமிழன்…”விஸ்வநாதன் ஆனந்தால் கூட முடியாததை சாதித்த 20 வயது இளைஞன்…₹50 லட்சத்தை தூக்கிக் கொடுத்த முதல்வர் விஜய்… செஸ் சாம்பியனுக்கு கிடைத்த பிரம்மாண்ட அங்கீகாரம்…!
புகழ்பெற்ற நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் விஜய்யை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். மே 25 முதல் ஜூன் 5 வரை நடைபெற்ற இந்த சர்வதேச செஸ் தொடரில், உலகின் முன்னணி வீரர்களான மாக்னஸ் கார்ல்சன், குகேஷ், வின்சென்ட் கெய்மர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இத்தொடரின் இறுதிச்சுற்றில் ஜெர்மனி நாட்டின் வின்சென்ட் கெய்மரை மிகச் சிறப்பான ஆட்டத்தின் மூலம் வீழ்த்திய பிரக்ஞானந்தா, நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற மகத்தான வரலாற்றுச் சாதனையைத் தன்வசப்படுத்தியுள்ளார்.
இத்தொடர் முழுவதும் அசாத்திய திறமையை வெளிப்படுத்திய பிரக்ஞானந்தா, உலகத்தரம் வாய்ந்த முன்னணி வீரரான மாக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை தோற்கடித்து ஒட்டுமொத்த சர்வதேச செஸ் உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார். இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த இந்த அரிய சாதனைக்காகப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தமிழக முதல்வர் விஜய் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும், விளையாட்டுத் துறை பிரபலங்களும் பிரக்ஞானந்தாவுக்குத் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற சந்திப்பின் போது, பிரக்ஞானந்தாவின் சாதனையைப் பாராட்டித் தமிழக அரசு சார்பில் ரூபாய் 50 லட்சத்திற்கான ஊக்கத்தொகைக்கான காசோலையை முதல்வர் விஜய் வழங்கினார். இந்தச் சந்திப்பின் போது முதல்வர் விஜய்யும், பிரக்ஞானந்தாவும் இணைந்து சுவாரசியமாகச் செஸ் விளையாடி மகிழ்ந்தனர். இந்தச் சாதனை மூலம் தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் உலக அரங்கில் பெரும் பெருமையைத் தேடித்தந்துள்ள இளம் வீரர் பிரக்ஞானந்தாவிற்குச் சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
