LATEST NEWS
“கைது பண்ண போறீங்களா…?” ஆபாசமாக பேசி போலீஸ் மீது நாயை ஏவிய மோசடி தம்பதி… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!
கன்னியாகுமரி மாவட்டம் மேல நெய்யூர் பகுதியைச் சேர்ந்த துணி வியாபாரி கிரேட் பிரின்ஸ் ராஜ் என்பவர், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாகத் தனது குடும்பச் சொத்தை மீட்க உதவி கோரியுள்ளார். அப்போது அவரது உறவினரான கிருஷ்ணவேணி மற்றும் அவரது கணவர் நாகசுமன் ஆகியோர், சட்டப்படி சொத்தைப் பெற்றுத் தருவதாக ஆசைவார்த்தை கூறி அவரிடமிருந்து தவணை முறையில் ரூ.5 லட்சத்து 93 ஆயிரத்து 390 பணம் மற்றும் ஒரு காரைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, மோசடி செய்யப்பட்ட காரைப் பறிமுதல் செய்ததோடு தலைமறைவாக இருந்த தம்பதியைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில், தோவாளையில் உள்ள தம்பதியின் வீட்டிற்கு இன்ஸ்பெக்டர் பச்சைமால் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் அனுஜன் தலைமையிலான போலீசார் அதிரடியாகச் சென்று நாகசுமனைப் பிடிக்க முயன்றனர். அப்போது அவரது மனைவி கிருஷ்ணவேணி போலீசாரை ஆபாசமாகத் திட்டித் தடுத்ததோடு, தங்களின் வளர்ப்பு நாயை அவர்கள் மீது ஏவியுள்ளார். அந்த நாய் பாய்ந்து கடித்ததில் சப்-இன்ஸ்பெக்டர் அனுஜனுக்கு ரத்தக் காயம் ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு உண்டானது. இறுதியில், போலீசார் தம்பதி இருவரையும் அதிரடியாகக் கைது செய்தனர். கைதான நாகசுமன் மீது ஏற்கனவே மதுரை, ஊட்டி, நெல்லை, திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்ட காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
