LATEST NEWS
நீட் விவகாரம்..! அன்று அண்ணா ஹசாரே… இன்று சோனம் வாங்சுக்… மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தாதது ஏன்..? கொந்தளிக்கும் பிரபலங்கள்..!!
மத்திய அரசின் நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்தைக் கண்டித்து, டெல்லி ஜந்தர் மந்தரில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கடந்த ஜூன் 28 முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார். தற்போது 17-வது நாளை எட்டியுள்ள இந்த நீண்ட போராட்டத்தால் அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவரது உடல் எடை சுமார் 8.2 கிலோ குறைந்துள்ளதோடு, ரத்த அழுத்தம் மற்றும் ரத்த சர்க்கரை அளவும் அபாயகரமாக வீழ்ச்சியடைந்துள்ளதால், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
சோனம் வாங்சுக்கின் மோசமடைந்து வரும் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா தனது எக்ஸ் தளத்தில் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில், இந்த உண்ணாவிரதப் போராட்டம் நீதிக்காகப் போராடும் நாட்டின் இளைஞர்களை ஒன்றிணைத்து அதன் இலக்கை அடைந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தற்போதைய அரசுக்கு இளைஞர்களின் எதிர்காலம் குறித்தோ அல்லது சோனம் வாங்சுக்கின் உயிர் குறித்தோ கவலை இல்லை என்றாலும், அவரது உயிர் நாட்டு மக்களுக்கு மிக முக்கியமானது என்பதால், உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு மாற்று வழிகளில் போராட்டத்தை முன்னெடுக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
இப்போராட்டத்திற்கு எழுத்தாளர் அருந்ததி ராய், நடிகர்கள் நசீருதீன் ஷா, ரத்னா பதக் ஷா மற்றும் பொருளாதார அறிஞர் ஜெயதி கோஷ் ஆகியோர் தங்களது முழு ஆதரவைத் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அவர்கள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியதோடு, எதிர்காலப் போராட்டங்களை வழிநடத்த சோனம் வாங்சுக்கின் உடல்நலம் அவசியம் என்பதால் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர். மேலும், 2011-ல் அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தபோது 12 நாட்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்திய அரசு, தற்போது உலகப் புகழ்பெற்ற கல்வியாளரான சோனம் வாங்சுக்கின் உடல்நிலை இவ்வளவு மோசமடைந்தும் இன்னும் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
