LATEST NEWS
லாக் அப் டெத்.. இரவோடு இரவாக தலைமை வார்டன் உட்பட மூவர் கைது.. CM விஜய் அதிரடி ஆக்ஷன்..!!
நாகர்கோவில் மாவட்ட சிறையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை வழக்கில் அடைக்கப்பட்ட மாற்றுத்திறனாளி விசாரணைக்கைதி சபரிவர்மன் (35) அண்மையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். மாரடைப்பால் அவர் இறந்ததாக சிறை நிர்வாகம் கூறிய நிலையில், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மரணத்தில் சந்தேகம் தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட நீதிபதி முன்னிலையில் நடத்தப்பட்ட உடற்கூராய்வின் முதற்கட்ட அறிக்கையில், சபரிவர்மனின் கை, கால்கள், நெஞ்சு மற்றும் தலைப் பகுதிகளில் 19 இடங்களில் காயங்கள் இருப்பதும், அவரது வலது கை முறிக்கப்பட்டு இருப்பதும் அம்பலமாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த உடற்கூராய்வு அறிக்கையின் அடிப்படையில், இச்சம்பவம் சிறைத்துறையினரால் நிகழ்த்தப்பட்ட சித்ரவதை மரணம் என்பதை உறுதி செய்த நேசமணிநகர் காவல் நிலைய போலீசார் வழக்கை தீவிரமாக விசாரித்தனர். அதன் தொடர்ச்சியாக, சபரிவர்மனை கட்டிவைத்துத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட சிறை தலைமை வார்டன் ஜெகன், வார்டன் சிவக்குமார் மற்றும் தலைமை சிறை காவலர் திருவிடைநம்பி ஆகிய 3 பேரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
