LATEST NEWS
“நீ முஸ்லிமா?” .. ஒரே ஒரு கேள்வியால் விபரீதமான இந்திய வாலிபரின் நிலை.. அமெரிக்காவில் நடந்த பயங்கரம்..!!
அமெரிக்காவின் உட்டா மாகாணம், வெஸ்ட் வேலி சிட்டியில் உள்ள ஒரு வணிக வளாக நகைக்கடையில் பணியாற்றி வந்த இந்திய முஸ்லிம் வாலிபரான சொஹைல் என்பவர், மதவெறி காரணமாகக் கத்தியால் குத்தப்பட்ட கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கடையில் சொஹைல் பணியில் இருந்தபோது, அங்கு வந்த பீட்டர் மைக்கேல் லார்சன் என்ற நபர் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டுள்ளார். சொஹைல் தண்ணீரை எடுக்கத் திரும்பிய நேரத்தில், அந்த நபர் அவரது அடையாளம் மற்றும் மதம் குறித்துக் கேள்விகளை எழுப்பியுள்ளார். சொஹைல் தான் ஒரு இந்திய முஸ்லிம் என்று பதிலளித்த அடுத்த கணமே, ஆத்திரமடைந்த அந்த நபர் சொஹைலை நோக்கி “நீ முஸ்லிமா?” எனக் கேட்டு, கத்தியால் சரமாரியாகக் குத்தத் தொடங்கியுள்ளார்.
இந்த கொடூரத் தாக்குதலில் சொஹைலின் உடலில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக் குத்து விழுந்து, அதிக இரத்தப்போக்குடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான சொஹைலின் மருத்துவச் செலவிற்காக அவரது நண்பர்கள் தற்போது நிதி திரட்டி வருகின்றனர். மனிதநேயமற்ற இந்த மதவெறித் தாக்குதலை நடத்திய பீட்டர் மைக்கேல் லார்சனை அமெரிக்கப் போலீசார் உடனடியாகக் கைது செய்து, சால்ட் லேக் கவுண்டி சிறையில் அடைத்துள்ளனர்.
