LATEST NEWS
“விராலிமலை இடைத்தேர்தல்.. புதிய மா.செ-க்களுக்கு EPS கொடுத்த அதிரடி டாஸ்க்.. சூடுபிடிக்கும் தேர்தல் களம்”..!!
புதுக்கோட்டை மாவட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் சி. விஜயபாஸ்கர் மற்றும் பி.கே. வைரமுத்து ஆகியோர் அண்மையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததைத் தொடர்ந்து, அந்த மாவட்டத்தில் அதிமுகவை மறுசீரமைக்கும் பணிகளில் கட்சித் தலைமை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை மாவட்டம் அதிமுக சார்பில் மூன்று நிர்வாக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, பழனிவேல், ராமு, கலைச்செல்வன் ஆகியோர் புதிய மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அதிரடி மாற்றங்களுக்குப் பிறகு, புதுக்கோட்டை மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தற்போது அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், முக்கிய நிர்வாகிகள் விலகியதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழலைக் கையாள்வது மற்றும் மீண்டும் கட்சியை அடிமட்ட அளவில் இருந்து பலப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. மேலும், விராலிமலை தொகுதிக்கு வரவிருக்கும் இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றியை எவ்வாறு உறுதி செய்வது, அதற்கான தேர்தல் வியூகங்களை எவ்வாறு வகுப்பது என்பது குறித்தும் நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி ஆலோசனைகளையும், முக்கிய அறிவுறுத்தல்களையும் வழங்கி வருகிறார்.
