LATEST NEWS
“வீட்ல இருக்கிறவங்களை நிறுத்தச் சொல்லுங்க”… மேடையிலேயே மாணவர்களுக்கு அண்ணாமலை கொடுத்த அதிரடி டாஸ்க்..!!
திருப்பூரில் நடைபெற்ற பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அண்ணாமலை, மாணவர்கள் தங்களது வீடுகளில் உள்ளவர்களிடம் மதுப்பழக்கத்தை நிறுத்தக் கோரி அறிவுறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். ‘WE THE LEADERS’ என்ற அமைப்பு மது ஒழிப்பை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றி, அடுத்த ஒரு மாத காலத்திற்குத் தீவிரப் பரப்புரையை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மதுவின் தீமைகள் குறித்து அரசியல் தலைவர்களோ அல்லது மற்றவர்களோ சொல்வதை விட, பள்ளி மாணவர்களாகிய நீங்கள் கூறும்போதுதான் மக்கள் அதனை எளிதாகக் கேட்டு மனமாற்றம் அடைவார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், மது ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் தங்களது குடும்பத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், பொதுவெளிக்கும் கொண்டு சென்று மற்றவர்களிடமும் சேர்க்க வேண்டும் என்று அண்ணாமலை கேட்டுக்கொண்டார். சமூகத்தில் மதுவினால் ஏற்படும் பாதிப்புகளைக் களைவதற்கும், ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதற்கும் மாணவர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமானது என்பதை இந்த உரையின் மூலம் அவர் வலியுறுத்தியுள்ளார்.
