LATEST NEWS
“தப்பு செஞ்சா உடனே தண்டனை” – சொத்துக் குவிப்பு, நிர்வாக சீர்கேட்டில் சிக்கிய அறநிலையத்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட்.. அமைச்சர் ரமேஷ் அதிரடி..!!
தமிழ்நாட்டில் உள்ள முக்கியத் திருக்கோயில்களில் ஊழல், முறைகேடுகள் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளைத் தடுக்கும் வகையில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இருவரைப் பணியிடை நீக்கம் செய்து அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலின் கருவூலம் மற்றும் நிர்வாகப் பணிகளைக் கவனித்து வந்த அலுவலர் பழனிவேல் என்பவர், தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் அவர் மீது முதற்கட்டமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை வடபழனி முருகன் கோயிலில் நிர்வாக ஒழுங்கின்மை மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து, அங்கு இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வந்த ஹரி கோவிந்த் என்பவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அறநிலையத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றது முதற்கொண்டே, தமிழகத்தின் பல்வேறு கோயில்களுக்கு நேரில் சென்று அமைச்சர் ரமேஷ் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். கோயில்களில் திருப்பணிகள், வேலைவாய்ப்புகள் மற்றும் சிறப்புத் தரிசனம் என்ற பெயரில் பக்தர்களிடம் சட்டவிரோதமாகப் பணம் பெறுவது போன்ற புகார்களைத் தனது தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு ஆதாரங்களுடன் அனுப்பலாம் என்றும், அதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் ஏற்கனவே எச்சரித்திருந்தார். அதன் தொடர்ச்சியாகவே, தற்போதைய இந்த அதிரடிப் பணியிடை நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் துறையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம், முறைகேடுகளில் ஈடுபடும் பிற கோயில் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
