LATEST NEWS
“அவங்களே பாம் வைப்பாங்களாம், அவங்களே எடுக்கச் சொல்வாங்களாம்” – நீட் தேர்வுக்கு எதிராகப் போராடும் காங்கிரஸை ‘வடிவேலு காமெடி’ ரேஞ்சுக்கு வறுத்தெடுத்த நயினார் நாகேந்திரன்..!!
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது திமுகவுடன் கைகோர்த்துக்கொண்டு கொண்டுவரப்பட்ட நீட் தேர்வுக்கு எதிராக, தற்போது அதே காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்துவது வேடிக்கையாக உள்ளது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார். காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூரின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்த 2013 மே 5ஆம் தேதிதான் முதன்முதலாக நீட் தேர்வு நடத்தப்பட்டது என்றும், பாஜக அரசு 2014 மே 26 அன்றுதான் ஆட்சிக்கு வந்தது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீட் தேர்வின் உண்மை வரலாற்றை விளக்கியுள்ள நயினார் நாகேந்திரன், கடந்த 2010 டிசம்பரில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குலாம் நபி ஆசாத் மத்திய சுகாதார அமைச்சராக இருந்தபோதுதான் மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது என்றும், அப்போது திமுகவின் காந்தி செல்வன் அதே அமைச்சகத்தின் இணை அமைச்சராக இருந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், 2013 ஜூலையில் உச்ச நீதிமன்றம் நீட் தேர்வை ரத்து செய்தபோது, அதற்கு எதிராக அப்போதைய காங்கிரஸ் அரசு உடனடியாக மேல்முறையீடு செய்தது என்றும், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் நீட் தேர்வுக்கு ஆதரவாக வாதாடினார் என்றும் அவர் சாடியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாகவே கடந்த 2016 ஏப்ரல் மாதத்தில் உச்ச நீதிமன்றம் தனது பழைய தீர்ப்பை மறுபரிசீலனை செய்து நீட் தேர்வை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வந்தது என்று நயினார் நாகேந்திரன் விளக்கியுள்ளார். தாங்களே நீட் தேர்வை உருவாக்கிவிட்டு, தற்போது அதற்கு எதிராகப் போராடுவதைப் பார்க்கும்போது, “அவங்களே பாம் வைப்பாங்களாம், அவங்களே எடுக்கச் சொல்வாங்களாம்” என்ற காமெடிதான் நினைவுக்கு வருகிறது என அவர் விமர்சித்துள்ளார். “பொய் சொன்னால் சாமி கண்ணைக் குத்தும்” என்று கூறும் காங்கிரஸ் தலைவர்கள், தங்களுக்கு பள்ளியில் சொல்லிக்கொடுத்த “தன்நெஞ்சறிவது பொய்யற்க” என்ற குறளை மறந்துவிட்டுத் தொடர்ந்து பொய் சொல்லி மாட்டி கொள்கிறார்கள் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
