LATEST NEWS
“உங்க மேல ஹவாலா கேஸ் இருக்கு… அரெஸ்ட் பண்ணப்போறோம்..!” சிபிஐ கெட்டப்பில் ஓய்வுபெற்ற நீதிபதியையே… வாட்ஸ்அப் வீடியோ காலில் மிரட்டி ரூ.2.5 கோடியை ஆட்டையைப் போட்ட கும்பல்..!!
ராஜஸ்தானில் சிபிஐ அதிகாரிகள் மற்றும் ரிசர்வ் வங்கி மேலாளர் போல் இணையவழியில் நடித்து, 90 வயதான முன்னாள் மாவட்ட நீதிபதி கண்பத் சிங் பண்டாரியிடம் இருந்து ரூ.2.50 கோடியை மோசடி செய்த நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கடந்த ஜூலை 28-ஆம் தேதி, வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு மூலம் காவல் சீருடை அணிந்த நபர் ஒருவர் தன்னை மும்பையைச் சேர்ந்த சிபிஐ அதிகாரி என அறிமுகப்படுத்தியுள்ளார். ரூ.50 கோடி மதிப்பிலான ஹவாலா பரிவர்த்தனையில் ரூ.40 லட்சம் நீதிபதியின் எஸ்பிஐ கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, கைது செய்யாமல் இருக்கத் தங்கள் வங்கிக் கணக்கிற்குப் பணத்தை அனுப்புமாறு மிரட்டியுள்ளார்.
இதனால் ஏற்பட்ட பயம் மற்றும் மன அழுத்தத்தின் காரணமாக, முன்னாள் நீதிபதி ஆகஸ்ட் 3 முதல் 10-ஆம் தேதிக்குள் தனது எஸ்பிஐ கணக்கிலிருந்து ரூ.2,50,51,000 பணத்தை மோசடி நபர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளார். பின்னர், மற்றொரு நபர் தன்னை ரிசர்வ் வங்கி மேலாளர் எனக் கூறி நீதிபதியைத் தொடர்புகொண்டு, அவரது மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் நிதி ஆவணங்களின் விவரங்களைப் பெற்றுள்ளார். மோசடி நபர்கள் ஓய்வுபெற்ற நீதிபதியைச் சுமார் 15 நாட்கள் ‘டிஜிட்டல் காவலில்’ வைத்திருந்ததுடன், பென்சன் கணக்கிலிருந்தும் பணத்தை மாற்றுமாறு கூறி, ஒவ்வொரு உரையாடலுக்குப் பிறகும் வாட்ஸ்அப் தகவல்களை அழிக்குமாறு எச்சரித்துள்ளனர்.
நீதிபதி தனது பென்சன் பணத்தையும் பரிமாற்றம் செய்வதற்காக எஸ்பிஐ வங்கியின் ஜோஹரி பஜார் கிளையை அணுகியபோது, சந்தேகமடைந்த வங்கி மேலாளர் அந்தப் பணப் பரிவர்த்தனையை நிறுத்தி விசாரித்ததில் அவர் இணையவழி மோசடிக்கு ஆளாகியிருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, நீதிபதியின் மருமகன் ரவீந்திர சிங் மோனோட் அளித்த புகாரின் பேரில், ஜெய்ப்பூரில் உள்ள ஜோதி நகர் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து, ஆன்லைன் இணையவழி மோசடியில் ஈடுபட்ட நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
