LATEST NEWS
“ChatGPT என் செருப்ப காணோம் கண்டுபிடிச்சி குடு” -உஜ்ஜைன் கோயிலில் கதறிய இளைஞர்… கண்ணிமைக்கும் நேரத்தில் AI செய்த காரியம்… இணையவாசிகள் ஆச்சர்யம்.!!
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள புகழ்பெற்ற மகாகால் கோயிலுக்குத் தரிசனம் செய்யச் சென்ற ஒரு நபருக்கு, அவர் நினைத்துப் பார்க்காத ஒரு சுவாரசியமான அனுபவம் ஏற்பட்டுள்ளது. கோயிலுக்கு வெளியே நூற்றுக்கணக்கான பக்தர்கள் கழற்றி விட்டிருந்த காலணிகளுக்கு இடையே, தனது செருப்பைக் கண்டுபிடிக்க முடியாமல் அவர் திணறியுள்ளார். இறுதியில், இந்த இக்கட்டான சூழ்நிலைக்குத் தீர்வு காண அவர் எந்த மனிதரின் உதவியையும் நாடாமல், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமான சாட்ஜிபிடியைப் பயன்படுத்த முடிவு செய்தார்.
கோவாவைச் சேர்ந்த சுபாங் போர்க்கர் என்ற அந்த நபர், இந்த முழு சம்பவத்தையும் வீடியோவாகப் பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் முதலில் கோயிலுக்கு வெளியே செருப்புகள் வைக்கப்பட்டிருந்த இடத்தைச் சுற்றிலும் வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்தார். பின்னர் சாட்ஜிபிடி செயலியைத் திறந்து, தான் உஜ்ஜைன் மகாகால் கோயிலில் இருப்பதாகவும், அங்குள்ள கூட்டத்தில் தனது செருப்பு தொலைந்துவிட்டதாகவும் கூறி, செருப்புகள் இருக்கும் புகைப்படங்களையும், தனியாகத் தனது செருப்பின் ஒரு புகைப்படத்தையும் அதற்கு அனுப்பியுள்ளார்.
அவர் அனுப்பிய புகைப்படங்களை ஒவ்வொன்றாக ஸ்கேன் செய்து ஆய்வு செய்த சாட்ஜிபிடி, இறுதியாக ஒரு குறிப்பிட்ட இடத்தை நோக்கி அடையாளம் காட்டியது. செருப்பு வைக்கும் ரேக்கின் வலது பக்கத்தில், நடுப்பகுதிக்குக் கீழே இருக்கும் ஒரு ஜோடி செருப்பு, சுபாங்கின் செருப்பைப் போலவே இருப்பதாக அது தெரிவித்தது. சாட்ஜிபிடி சொன்ன இடத்திற்குச் சென்று பார்த்தபோது, அங்கு உண்மையிலேயே அவரது செருப்பு இருந்தது. இந்தத் தொழில்நுட்பத்தின் விசித்திரமான பயன்பாட்டைக் கண்ட இணையவாசிகள் தங்களது வியப்பைத் தெரிவித்து, இந்த வீடியோவை தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
