LATEST NEWS
“இங்க வண்டியை நிறுத்தாதேன்னு சொன்னா கேட்க மாட்டியா..?” காதுகுத்து விழாவிற்குத் துணி எடுக்க வந்த இடத்தில் நேர்ந்த கொடூரம்… உணவக ஊழியருடன் வாக்குவாதம்… பெண்களைத் தாக்கியதாக திமுக நிர்வாகிகள் அதிரடி கைது..!!
செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் மலையாளத் தெருவைச் சேர்ந்த ரேகா என்ற பெண், தனது பேத்தியின் காதுகுத்து விழாவுக்காகக் குடும்பத்தினருடன் துணி எடுக்கச் செங்கல்பட்டு பகுதியில் உள்ள கடைக்குச் சென்றுள்ளார். ரேகா, அவரது மகன், மகள் மற்றும் மருமகள் ஆகிய 4 பேரும் காரில் பயணித்துள்ளனர். செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே ஜூஸ் குடிப்பதற்காகக் காரைச் சாலையோரமாக நிறுத்தியபோது, அருகில் உள்ள உணவக ஊழியர் ஒருவர் அங்கு காரை நிறுத்தக் கூடாது எனக்கூறி உடனடியாக காரை அப்புறப்படுத்துமாறு தெரிவித்துள்ளார். இதனால் ரேகாவின் குடும்பத்தினருக்கும் உணவக ஊழியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் அது கைகலப்பாக மாறியுள்ளது.
இந்தத் தகராறில், உணவகத்தின் உரிமையாளரும் செங்கல்பட்டு திமுக நகர செயலாளருமான நரேந்திரன், 30-வது வார்டு திமுக கவுன்சிலர் சந்தோஷ் மற்றும் உணவக ஊழியர்கள் சிலர் சேர்ந்து ரேகா மற்றும் அவரது குடும்பத்தினரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த ரேகா மற்றும் அவரது குடும்பத்தினர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து ரேகா தரப்பில் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், திமுக நகர செயலாளர் நரேந்திரன், 30-வது வார்டு கவுன்சிலர் சந்தோஷ் மற்றும் மோகன், சூரியா ஆகிய 4 பேரைக் கைது செய்தனர். இவர்கள் மீது பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம், ஆபாசமாகப் பேசுதல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட 4 பேரையும் செப்டம்பர் 4-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
