LATEST NEWS
கண்ணிமைக்கும் நேரத்தில் கொடூரம்..! சிக்னலில் நின்ற ஸ்கூட்டர் மீது அதிவேக பலேனோ கார் மோதி 33 வயதான ஹேர் ஸ்டைலிஸ்ட் பலி… நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!
பெங்களூருவில் உள்ள கக்கதாசபுரா முதன்மைச் சாலையில் உள்ள விக்ஞான நகர் சிக்னலில் திங்கள்கிழமை காலை 10:00 மணியளவில் சோகமான விபத்து ஒன்று நடந்துள்ளது. போக்குவரத்து சிக்னலில் வாகனங்கள் காத்திருந்தபோது, அதிவேகமாக வந்த பாலேனோ கார் பல வாகனங்கள் மீது மோதியதில் 33 வயதான நவீன் என்ற ஹேர் ஸ்டைலிஸ்ட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த கொடூர விபத்தின் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
சிசிடிவி காட்சிகளின்படி, சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்ததால் இரண்டு மூன்று கார்களும் சில இருசக்கர வாகனங்களும் காத்திருந்தன. வெள்ளை மற்றும் பச்சை நிற கட்டமிட்ட சட்டை அணிந்திருந்த நவீன், தனது ஸ்கூட்டியில் சிக்னலில் நின்றுகொண்டிருந்தார். அடுத்த சில நொடிகளில், வேகமாக வந்த கருப்பு நிற பாலேனோ கார் நவீனின் ஸ்கூட்டி மற்றும் பிற வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நவீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து நடந்தவுடன் அங்கு பெருந்திரளான மக்கள் கூடினர்.
வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோதே நவீன் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய 63 வயதான காரின் ஓட்டுனரைக் காவல் துறையினர் கைது செய்து காவலில் எடுத்துள்ளனர். இது தொடர்பாக ஜீவன் பீமா நகர் போக்குவரத்து காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், விபத்து நடந்தபோது காரை ஓட்டி வந்தவர் மது அருந்தியிருந்தாரா என்பது குறித்து தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
