LATEST NEWS
“அய்யய்யோ ஏதோ ஆயிடுச்சு போல..” நெஞ்சைப் பிடிச்சுட்டு ஓடிவந்த ஜனங்க…! உள்ள எட்டிப் பார்த்தா.. காதுல பாட்டை போட்டுட்டு நிம்மதியா தூங்கிய போதை ஆசாமி..! கோட்டயத்துல ஒரு போதை ஆசாமியின் ஃபன் அலப்பறை..!!
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள எட்டுமானூர் – அதிரம்புழா சாலையில், பிஸியான மாலை நேரத்தில் ஒரு சிவப்பு நிற கார் திடீரெனச் சாலையின் நடுவே வந்து நின்றது. அதிரம்புழா பள்ளி சந்திப்பு அருகே நடந்த இந்தச் சம்பவத்தில், காரை ஓட்டி வந்த வாலிபர் வாகனத்தைச் சாலையோரமாகக் கூட நிறுத்தாமல், நடுவழியிலேயே நிறுத்திவிட்டு ஸ்டீயரிங் மீது தலையை வைத்து அசந்து தூங்கத் தொடங்கினார். இதனால் அந்தச் சாலையில் வந்த அரசுப் பேருந்துகள் உட்படப் பல வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நீண்ட நேரமாக கார் நகராமல் நடுரோட்டில் நிற்பதைக் கண்ட அப்பகுதி மக்களும், பிற வாகன ஓட்டிகளும், ஓட்டுநருக்கு ஏதேனும் திடீர் உடல்நலக் குறைவு அல்லது மருத்துவ அவசர நிலை ஏற்பட்டுள்ளதோ என்ற அச்சத்தில் உதவி செய்ய காரை நோக்கி ஓடிவந்தனர். ஆனால், காரின் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது, அந்த வாலிபர் காதில் இயர்போன் மாட்டிப் பாட்டு கேட்டபடி மிக நிம்மதியாகக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து பொதுமக்கள் காரைக் பலமாக உலுக்கியும், கண்ணாடிகளைத் தட்டியும் சத்தமிட்டும் பல முயற்சிகளுக்குப் பிறகே அவரை ஒருவழியாக எழுப்பினர்.
போக்குவரத்து நெரிசல் அதிகரித்ததால் பொதுமக்கள் உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த எட்டுமானூர் போலீசார் காரைச் சோதனையிட்டபோது, காரின் உள்ளே மது மற்றும் சோடா பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. அவர் அதிக மதுபோதையில் காரை ஓட்டிவந்து சாலையையே தன் படுக்கையறையாக நினைத்துத் தூங்கியது விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து, மதுபோதையில் வாகனம் ஓட்டி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதற்காக போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். இச்சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகப் பரவி வருகிறது.
