LATEST NEWS
“குழந்தைகளின் உடல் பருமனுக்கு செக்..!” பாக்கெட் உணவுகளில் இனி சிவப்பு எச்சரிக்கை லேபிள் கட்டாயமாகிறது.. FSSAI அதிரடி உத்தரவு..!!
பாக்கெட் உணவுகளில் சிவப்பு எச்சரிக்கை லேபிள் கொண்டு வருவது குறித்த புதிய உத்தரவை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் முன்மொழிந்துள்ளது. இந்தியாவில் குழந்தைகளிடையே வேகமாக அதிகரித்து வரும் உடல் பருமன் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுப்பதே இந்த புதிய திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். தற்போதைய மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்களால் சிறுவர்கள் மத்தியில் உடல் பருமன் ஆபத்தான அளவில் உயர்ந்து வருவதை அடுத்து, நுகர்வோர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறையின்படி, அதிக சர்க்கரை, அதிக உப்பு அல்லது அதிக கொழுப்பு உள்ள பாக்கெட் உணவுகளின் முன்பக்கத்திலேயே பொதுமக்கள் எளிதாகப் பார்த்து உடனடியாகத் தெரிந்துகொள்ளும் வகையில் எச்சரிக்கை விடுக்கப்படும். அங்கு பெரிய எழுத்துக்களில் அச்சிடப்பட்ட சிவப்பு நிற அறுகோண வடிவ எச்சரிக்கை லேபிள் கட்டாயமாக ஒட்டப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் குழந்தைகளிடையே அதிகரித்து வரும் உடல் பருமன் மற்றும் ஆரோக்கியக் குறைபாடுகள் குறித்து சமீபத்தில் உச்சநீதிமன்றம் கடுமையான கவலையை எழுப்பியிருந்தது. இதனைத் தொடர்ந்தே, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) இந்த எச்சரிக்கை லேபிள் திட்டத்தை மிகத் தீவிரமாக ஆலோசித்து, தற்போது நாடு முழுவதும் நடைமுறைப்படுத்துவதற்கான பெரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
