LATEST NEWS
“அவங்க அப்பா என்ன தாக்கல் செஞ்சாருனு சொல்லனும்ல.. என்ன பயமா?” சட்டுன்னு வார்த்தையை விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா… கொந்தளித்த திமுகவினர்.. சட்டப்பேரவையில் பரபரப்பு..!!
தமிழக சட்டப்பேரவையின் தற்போதைய கூட்டத்தொடரில் ஆளுங்கட்சியான தவெக-விற்கும் எதிர்க்கட்சியான திமுக-விற்கும் இடையே அனல் பறக்கும் விவாதங்களும், தனிநபர் விமர்சனங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. குறிப்பாக, கடந்த திமுக ஆட்சியில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சட்டப்பேரவையில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பெயரைக் குறிப்பிடாமல், “அவங்க அப்பா என்ன தாக்கல் செஞ்சாருனு சொல்லனும்ல.. இப்ப எதுக்கு எழுந்து நிக்கிறீங்க.. என்ன பயமா?” என்று அவையிலேயே மிக ஆக்ரோஷமாகச் சவால் விடுத்தார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை “அப்பா” என்று பொதுவெளியில் ஏகவசனத்தில் வம்புக்கு இழுத்ததால் அவையில் இருந்த திமுக உறுப்பினர்கள் அனைவரும் சட்டென கடுமையான டென்ஷனானார்கள். அமைச்சரின் இந்தத் தனிநபர் விமர்சனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் அனைவரும் ஒரே நேரத்தில் தங்களது இருக்கைகளை விட்டு எழுந்து நின்று அவையில் கடும் கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்டனர். தவெக அமைச்சரின் இந்த அதிரடியான மற்றும் ஆக்ரோஷமான பேச்சால், சட்டப்பேரவை வளாகமே சலசலப்புடன் கூடிய பெரும் பரபரப்புக்கு உள்ளானது.
