LATEST NEWS
“முதல்வர் விஜயோட மனசு எல்லாம் இங்க தான் இருக்கு” நாங்க மட்டும் வந்திருக்கோம்னு நினைக்காதீங்க… எல்லாத்தையும் டிவில பாத்துட்டு தான் இருக்காரு… தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..!!
“நாங்கள் நான்கு பேர் மட்டும்தான் இங்கு வந்திருக்கிறோம் என்று நீங்கள் நினைக்க வேண்டாம்; முதல்வர் விஜய்யின் மனம் முழுவதும் இங்குதான் இருக்கிறது…” என்று சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் போராடி வரும் தூய்மைப் பணியாளர்களிடம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உணர்வுபூர்வமாகப் பேசியுள்ளார். 16 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களை, தவெக அரசின் அமைச்சர்களான ஆதவ் அர்ஜுனா, என். ஆனந்த், சி.டி.ஆர் நிர்மல் குமார் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் நேற்று நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பேசிய அமைச்சர், முதல்வர் விஜய் தங்களை உடனடியாக அனுப்பிப் பேசச் சொன்னதாகக் குறிப்பிட்டார்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் அவதியையும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளையும் தமிழக முதல்வர் விஜய் தொலைக்காட்சி வாயிலாகத் தொடர்ந்து உன்னிப்பாகக் கவனித்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார். ஜனநாயக ரீதியில் போராடும் தூய்மைப் பணியாளர்கள் மீது எவ்விதக் காவல்துறையின் அடக்குமுறையும் பிரயோகிக்கப்படக் கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். மேலும், தனது உரையின் நிறைவாக, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாய் “ஜெய் பீம், ஜெய் பீம், ஜெய் பீம்” என்று முழக்கமிட்டு தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்குத் தனது தார்மீக ஆதரவை அமைச்சர் வெளிப்படுத்தினார்.
தங்களது புதிய அரசு பொறுப்பேற்று 100 நாட்களே ஆவதால், இந்த வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குச் சட்டப்பூர்வமாகத் தீர்வு காணத் தங்களுக்குக் கூடுதல் அவகாசம் வழங்குமாறு பணியாளர்களிடம் அமைச்சர்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளது. ஒடுக்கப்பட்ட மற்றும் உழைக்கும் மக்களின் உரிமைகளைத் தவெக அரசு ஒருபோதும் விட்டுக் கொடுக்காது என்றும், பேச்சுவார்த்தை மூலம் கோரிக்கைகளுக்கு விரைவில் நல்ல தீர்வு எட்டப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
