LATEST NEWS
நாமக்கல்லை உலுக்கிய சோகம்..! கல்லூரி பேருந்து மோதி 4 மாணவிகள் உயிரிழப்பு… முதலமைச்சர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு…!!
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் அருகே உள்ள சக்கராம்பாளையத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சேகர் – அமுதா தம்பதியினரின் மகள்கள் சுபிதா கலைச்செல்வி, நிவேதிதா, தனுஸ்ரீ. சுபிதா கலைச்செல்வி ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்சி. கணிதம் 2-ம் ஆண்டும், நிவேதிதா மற்றும் தனுஸ்ரீ ஆகியோர் எலச்சிபாளையம் அரசு பள்ளியில் முறையே 11 மற்றும் 7-ம் வகுப்பும் படித்து வந்தனர். நேற்று பள்ளி முடிந்து தங்கைகளான நிவேதிதா, தனுஸ்ரீ மற்றும் சித்தப்பா ரமேஷ்பாபுவின் மகளான 6-ம் வகுப்பு மாணவி அபிநயா ஆகிய மூவரையும் அக்காள் சுபிதா கலைச்செல்வி தனது மொபட்டில் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
அவர்கள் வீட்டிற்கு செல்வதற்காக சக்கராம்பாளையம் பிரிவு ரோட்டை மொபட்டில் கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த தனியார் கல்லூரி பஸ் மொபட் மீது பயங்கரமாக மோதியது. இதில் மொபட்டில் சென்ற சுபிதா கலைச்செல்வி, அவரது தங்கைகள் நிவேதிதா, தனுஸ்ரீ மற்றும் உறவினர் சிறுமி அபிநயா ஆகிய 4 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து எலச்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்காள்-தங்கைகள் 3 பேர் உள்பட 4 மாணவிகள் பலியான இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் திருச்செங்கோட்டில் சாலை விபத்தில் உயிரிழந்த 4 மாணவிகளின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
