LATEST NEWS
“சமய முழக்கமா..? வன்முறையைத் தூண்டும் சதியா..?” ‘சர் தன் சே ஜூதா’ முழக்கத்திற்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் கொடுத்த சம்மட்டி அடி..! தௌகீர் ரசாவின் ஜாமீன் ரத்து..!!
பரேலி வன்முறை வழக்கில் முக்கிய குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள மவுலானா தௌகீர் ரசா கான் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி அசுதோஷ் ஸ்ரீவஸ்தவா தலைமையிலான தனி நீதிபதி அமர்வு, விசாரணையின் போது ‘சர் தன் சே ஜூதா’ (தலையை உடலிலிருந்து துண்டிப்பது) என்ற முழக்கம் குறித்து மிகவும் கடுமையான கருத்துகளைத் தெரிவித்தது. ‘நாரா-ஏ-தக்பீர்’, ‘அல்லாஹு அக்பர்’, ‘ஜோ போலே சோ நிஹால்’, ‘ஜெய் ஸ்ரீராம்’, ‘ஹர் ஹர் மகாதேவ்’ போன்ற முழக்கங்கள் இறைவனுக்கும் குருவுக்கும் செலுத்தும் பக்தியையும் மரியாதையையும் வெளிப்படுத்துபவை என்றும், அவற்றுடன் வன்முறையைத் தூண்டும் இந்த முழக்கத்தை ஒப்பிட முடியாது என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
நீதிமன்றத்தின் கருத்துப்படி, ‘சர் தன் சே ஜூதா’ என்ற முழக்கம் முற்றிலும் வேறுபட்ட தன்மையைக் கொண்டது. இத்தகைய முழக்கங்கள் சட்டத்தின் அதிகாரத்திற்கும் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கும் நேரடி சவாலாக அமைகின்றன என்று உயர்நீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும், இது மக்களை ஆயுதம் ஏந்தவும், கிளர்ச்சியில் ஈடுபடவும் தூண்டும் வகையில் உள்ளது என்றும், இது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்றும் நீதிபதி தனது உத்தரவில் சுட்டிக்காட்டினார்.
கடந்த 2025 செப்டம்பர் 26 அன்று பரேலியில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக மவுலானா தௌகீர் ரசா கான் மீது முதன்மை குற்றவாளியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி அவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தை அணுகியிருந்த நிலையில், நீதிமன்றம் ஜாமீனை நிராகரித்து கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளதால், இந்த வன்முறை வழக்கில் அவரது சட்டரீதியான சிக்கல்கள் மேலும் அதிகரித்துள்ளன.
