CRIME
பெற்ற மகளையே பலமுறை சீரழித்த கொடூரன்.. 15 வயது சிறுமி கர்ப்பமான கொடூரம்… ஈரோடு தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே 15 வயது சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை மற்றும் 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து ஈரோடு மகளிர் விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கூலித் தொழிலாளியான அந்த நபருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 2024-ஆம் ஆண்டு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது இளைய மகளை அவர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அதன் பின்னரும் வீட்டில் யாரும் இல்லாத போதெல்லாம் அந்தச் சிறுமியை மிரட்டி பலமுறை அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஒரு கட்டத்தில் அந்த 15 வயது சிறுமி கர்ப்பமடைந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்த அவரது தாய், உடனடியாக கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது கணவர் மீது புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அந்த நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.
கடந்த இரண்டு வருடங்களாக ஈரோடு மகளிர் விரைவு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பு வாதங்கள், சாட்சிகள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளியான தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ஸ்வர்ணகுமார் தீர்ப்பளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஏற்பட்ட பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, அவரது மறுவாழ்விற்காகத் தமிழக அரசின் இழப்பீட்டு நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளது. இன்று வெளியாகியுள்ள இந்த நீதிமன்றத் தீர்ப்பு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
