LATEST NEWS
“நான் தீவிர இந்து…” ஸ்ரீ ராமரை அவமதித்ததால் மை வீசினேன்..! எனப் பெண் முழக்கம்..! டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பரபரப்பு..!!
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில், ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’யின் நிறுவனர் அபிஜித் தீப்கே மீது பெண் ஒருவர் மை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், மை வீசிய அந்தப் பெண் தனது செயலுக்கு பகிரங்கமாகப் பொறுப்பேற்றுள்ளார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி இந்தத் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. நீட் உள்ளிட்ட பல்வேறு தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, ஜூன் 20 முதல் அபிஜித் தீப்கே தலைமையில் இளைஞர்கள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டக் களத்தில் 20 நாட்களாகத் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வந்த பிரபல சமூக செயல்பாட்டாளரும் கல்வியாளருமான சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மோசமடைந்தது. இதனால் டெல்லி போலீஸார் அவரை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதன் காரணமாகப் போராட்டக் களத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்ட நிலையில், தானும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கப்போவதாக அபிஜித் தீப்கே அறிவித்தார். அபிஜித் தீப்கே தனது உண்ணாவிரதப் போராட்டம் குறித்து ஆதரவாளர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மத்தியில் மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் திடீரென மேடையின் அருகே வந்து, தான் மறைத்து வைத்திருந்த மையை தீப்கேவின் முகத்தில் வீசினார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது ஆதரவாளர்கள் உடனடியாக அந்தப் பெண்ணைத் தடுத்த நிறுத்தினர்; அங்கிருந்த போலீஸாரும் தலையிட்டு நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த மை வீச்சுச் சம்பவத்திற்குப் பர்கா த்ரெஹான் என்ற பெண் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பொறுப்பேற்று விளக்கம் அளித்துள்ளார். அதில், “கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் மேடையில் எனது பிரபு ஸ்ரீராமர் பகிரங்கமாக அவமதிக்கப்பட்டபோது, அதைத் தடுத்து நிறுத்தாமல் தீப்கே மேடையில் நின்று சிரித்துக் கொண்டிருந்தார். நான் ஒரு தீவிரமான இந்து என்பதால் நமது கடவுள் பொதுவெளியில் இழிவுபடுத்தப்பட்டதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதற்கு எதிராக நான் காட்டிய எதிர்ப்புதான் இந்த மை வீச்சு; எனது இந்தச் செயலை எண்ணி நான் பெருமைப்படுகிறேன், இதில் எனக்கு எந்தப் பச்சாதாபமும் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, மை வீசப்பட்ட வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த அபிஜித் தீப்கே, ‘நீலம் எனது நிறம்… ஜெய் பீம்!’ என்று பதிவிட்டுப் பதிலடி கொடுத்துள்ளார். இதற்கிடையே, சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனம் வாங்சுக் அங்குக் கூட்டுச் சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
