LATEST NEWS
“அவங்க வாடகை வீட்டுக்கு வந்தவங்க”… இவங்க ஒரு பொருட்டே இல்லை… செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத்தை வெளுத்து வாங்கிய மதிமுக சு.ஜிவன்..!
காஞ்சிபுரம் ஓரிக்கையில் அமைந்துள்ள தனியார் விடுதியில், மதிமுக காஞ்சிபுரம் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்டச் செயலாளர் கருணாகரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மதிமுக துணைப் பொதுச்செயலாளர் சு.ஜிவன், கட்சியின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் மற்றும் எதிர்கால வளர்ச்சிப் பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த சு.ஜிவனிடம், “எதிர்காலத்தில் மதிமுகவைப் போல அதிமுகவும் மாறிவிடும்; சில தினங்களில் பல கட்சிகளில் தொண்டர்கள் இன்றி தலைவர்கள் மட்டுமே எஞ்சுவார்கள்” என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறிய கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், உண்மை எப்போதுமே கசக்கத்தான் செய்யும் என்றும், தான் எந்நாளும் உண்மையை மட்டுமே பேசக்கூடியவன் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், தவெக இயக்கம் தொடங்கப்பட்ட காலத்தில் செங்கோட்டையனோ அல்லது நாஞ்சில் சம்பத்தோ அதில் இல்லை என்று சுட்டிக்காட்டிய சு.ஜிவன், அவர்கள் வேறு இடங்களில் அரசியல் நடத்திவிட்டு தற்போது இங்கு வாடகை வீட்டிற்கு வந்திருப்பதாக விமர்சித்தார். நாளை தவெகவிற்கு ஏதேனும் சரிவு ஏற்பட்டால் இவர்கள் அடுத்த இடத்திற்கு வாடகைக்குச் சென்றுவிடுவார்கள் என்றும், இத்தகைய அரசியல் தரம் கொண்டவர்களை மதிமுக ஒருபோதும் பொருட்டாகவே மதிப்பதில்லை என்றும் அவர் காரசாரமாகத் தெரிவித்தார்.
