LATEST NEWS
இனி ஒரு ஆளுக்கு 9 சிம் கார்டு தான்… போலி சிம் மற்றும் டிஜிட்டல் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி..! ஆகஸ்ட் 24 முதல் அதிரடி விதியை அமல்படுத்தும் மத்திய அரசு..!!
இந்தியாவில் ஒரு தனிநபர் தனது பெயரில் அதிகபட்சமாக 9 சிம் கார்டுகள் மட்டுமே வைத்திருக்க முடியும் என்ற விதியை வரும் ஆகஸ்ட் 24 முதல் கட்டாயமாக செயல்படுத்த மத்திய தொலைத்தொடர்புத் துறை உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே தங்கள் பெயரில் 9 சிம் கார்டுகளை வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு இனி புதிய சிம் கார்டுகளை வழங்கக் கூடாது என ஜியோ, ஏர்டெல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. அதேநேரம் ஜம்மு காஷ்மீர், அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகபட்சமாக 6 சிம் கார்டுகள் மட்டுமே வைத்திருக்க முடியும். இந்த வரம்பு பத்தாண்டுகளுக்கு முன்பே கொண்டுவரப்பட்டது என்றாலும், தற்போது போலி சிம்கள் மற்றும் டிஜிட்டல் நிதி மோசடிகளை தடுக்கும் நோக்கில் இதை தீவிரமாக கடைபிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இனி புதிய சிம் கார்டு பெற விண்ணப்பிக்கும் போது, வாடிக்கையாளர்கள் தங்கள் பெயரில் ஏற்கனவே இயங்கி வரும் அனைத்து மொபைல் எண்களின் விவரங்களையும் விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட வேண்டும். தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளரின் தற்போதைய இணைப்புகளை சரிபார்த்த பின்னரே புதிய சிம் வழங்க முடியும். மத்திய அரசின் ‘சஞ்சார் சாதி’ இணையதளம் அல்லது செயலி மூலம் உங்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்களை எளிதாகக் கண்டறியலாம்.
அதற்கு Sanchar Saathi TAFCOP Portal இணையதளத்திற்குச் சென்று, “Know mobile connections in your name” என்பதைத் தேர்வு செய்து உங்கள் மொபைல் எண் மற்றும் திரையில் தோன்றும் ‘Captcha’ குறியீட்டைப் பதிவு செய்ய வேண்டும். உங்கள் மொபைலுக்கு வரும் OTP எண்ணை உள்ளிட்டு ‘Validate’ செய்த பின், உங்கள் அடையாள ஆவணத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து மொபைல் எண்களின் பட்டியலும் திரையில் தோன்றும். இந்தப் பட்டியலில் உங்களுக்கு தெரியாத அல்லது நீங்கள் பயன்படுத்தாத எண்கள் இருந்தால், “This is not my number” அல்லது “Not Required” என்பதைப் பயன்படுத்தி புகாரளிக்கலாம்.
