LATEST NEWS
“மனைவியை வற்புறுத்தினால் குற்றமா, இல்லையா..?” உச்ச நீதிமன்றம் எழுப்பிய ‘அந்த’ ஒரு முக்கிய சட்டக் கேள்வி..!!
திருமண உறவில் மனைவியை ஒரு கணவன் பலவந்தமாகப் பாலியல் உறவுக்கு உட்படுத்தினால், அது குற்றம் அல்ல என சட்டம் கூறும் நிலையில், அதே சட்டப்பிரிவின் அடிப்படையில் கணவனைப் பலாத்காரக் குற்றத்திற்காகத் தண்டிக்க முடியுமா என்ற முக்கிய சட்டக் கேள்வியை உச்ச நீதிமன்றம் எழுப்பியுள்ளது. தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஒரு செயல் குற்றம் அல்ல என்று சட்டம் தெளிவாகக் கூறும்போது, அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 20(1)-ன் படி அதே செயலுக்காக ஒரு நபரைப் பிற்காலத்தில் குற்றவாளியாகக் கருதி தண்டிக்க முடியாது என்று சுட்டிக்காட்டியுள்ளது. தற்போது அமலில் உள்ள பாரதிய நியாய சன்ஹிதாவின் 63(2)வது பிரிவிலும் 18 வயதுக்கு மேற்பட்ட மனைவியுடன் கணவன் மேற்கொள்ளும் பாலியல் செயல் பலாத்காரமாகக் கருதப்படாது என்ற விதிவிலக்கு தொடர்வது குறிப்பிடத்தக்கது.
இந்த விதிவிலக்கை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த நீதிமன்றத்தில், மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இது மிகவும் சிக்கலான விவகாரம் என்பதால் இதன் முடிவை நாடாளுமன்றத்தின் பரிசீலனைக்கே விட்டுவிட வேண்டும் என்று வாதிட்டார். இதைக் கருத்தில் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, குற்றவியல் சட்டங்களை ஆய்வு செய்யும்போது பொதுமக்களுக்கு எதிர்பாராத அதிர்ச்சிகளை ஏற்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், இந்தச் சட்டத்தில் ஏதேனும் பிரச்சினை இருப்பதாக அரசு கருதினால் நாடாளுமன்ற ஒப்புதலுடன் சட்டத்தை மீண்டும் வடிவமைக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டி வழக்கை ஒத்திவைத்துள்ளது.
